பஸ்டாண்டுக்கு போகாது.. டைம் இல்லை.. ஆண்டிமடம் தனியார் பேருந்து ஓட்டுனரை நையப்புடைத்த மக்கள்.!
Andimadam PLA Krishna Bus Driver Attacked by Keezhapalur villagers due to abuse speech
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி - சிதம்பரம் சாலையில் கீழப்பழுவூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு தனியார் சிமென்ட் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் அமைந்துள்ளது. இதனால் இந்த ஊருக்கு பணி நிமித்தம் காரணமாக பலரும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இவ்வழியாக செல்லும் பேருந்துகள் ஊருக்குள் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு வராமல், நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றனர். இதனால் பல விபத்துகள் அரங்கேறியுள்ள நிலையில், விபத்தை தவிர்க்கும் பொருட்டு சாலையில் வரும் அனைத்து பேருந்துகளும், பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் பெரும்பாலான பேருந்து ஓட்டுனர்கள் சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டுச் செல்லவே, இதனைக்கண்டு பெரும் கொந்தளிப்பிற்கு உள்ளாகிய கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மருதமுத்து மற்றும் அப்பகுதி மக்கள் பேருந்தை மறித்து பேருந்து நிலையத்திற்குள் சென்று வரும்படி கூறியுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்து என்ற பாரபட்சம் இல்லாமல், பேருந்துகளை பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைத்த நிலையில், திருச்சியில் இருந்து ஆண்டிமடம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர், பேருந்து நிலையத்திற்குள் செல்ல நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பும் தாக்கியுள்ளனர். தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், இருதரப்பையும் சமாதானப்படுத்தி பேருந்து ஓட்டுனரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
பின்னர் பேருந்து கட்டாயம் பேருந்து நிலையத்திற்கு சென்று வர வேண்டும் என்றும் அறிவுறுத்திய நிலையில், பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்க வேண்டாம் என்றும், காவல்துறை கவனத்திற்கு விஷயத்தை கொண்டு வாருங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Andimadam PLA Krishna Bus Driver Attacked by Keezhapalur villagers due to abuse speech