ரெயில் நிலையம் அருகே அதிரடி...! 7 கிலோ கஞ்சா பறிமுதல்... 2 பேர் காவலர்களிடம் சிக்கியது எப்படி...?
Action near railway station 7 kg of ganja seized How did 2 people get caught by police
திருநெல்வேலி கங்கைகொண்டானில் காவலர்களின் தீவிர கண்காணிப்பில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 கிலோ கஞ்சா சிக்கியது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உள்பட 2 பேரை காவலர்கள் கைது செய்தனர்.கங்கைகொண்டான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலடிப்பட்டி ரெயில் நிலையம் அருகே காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை கவனித்த காவலர்கள், அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.மேலும், விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான அந்தோணிராஜ் (25) மற்றும் பாரதிகண்ணன் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அரசால் தடை செய்யப்பட்டதும், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுமான 7 கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகின.
முக்கூடல் காவல் நிலையத்தில் பதிவான கஞ்சா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த மாஜி என்ற ராகுல், தற்போது ஒடிசாவில் இருந்து கஞ்சாவை தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்து வருவதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தொலைபேசி எண்ணை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆய்வு செய்தபோது, அந்தோணிராஜ் மற்றும் பாரதிகண்ணன் ஆகியோர் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், ஆலடிப்பட்டி ரெயில் நிலையம் அருகே 7 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக இருவரும் பதுக்கி வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களிடமிருந்த கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Action near railway station 7 kg of ganja seized How did 2 people get caught by police