தர்மபுரி எஸ்பி அலுவலக வளாகத்தில் பரபரப்பு; மனு கொடுக்க வந்த நபர் தீக்குளிப்பு..!
A person came to file a petition at the Dharmapuri SP office premises set himself on fire
தர்மபுரி எஸ்பி ஆபிஸ் வளாகத்தில் மனு கொடுக்க வந்த கோழி பண்ணை உரிமையாளர் ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. குறித்த நபர் 60% தீ காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இச்சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராஜா தோப்பு இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 52 வயதான ஜெயராமன். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கரில் விவசாய நிலத்தில், கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடன் பிரச்சனை ஏற்பட்டதால், தனது நண்பர் செல்வராஜ் என்பவரிடம் தனது நிலத்தின் பத்திரத்தை வைத்து பணம் கேட்டுள்ளார். பத்திரத்தை பெற்றுக்கொண்ட நண்பர் செல்வராஜ் 10 லட்சத்திற்கு பத்திரத்தை அடமானம் வைத்து, அதில் மூன்று லட்சம் மட்டும் ஜெயராமனிடம் கொடுத்துவிட்டு மீதி 07 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஜெயராமன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை செய்து செல்வராஜ் இடமிருந்து ஒரு பத்திரத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள மற்றொரு பத்திரத்தை கொடுக்காமலும் பெற்ற பணத்தை கொடுக்காமலும் செல்வராஜ் இழுத்தடித்து வந்துள்ளார்.
-lamln.png)
இது குறித்து ஜெயராமன் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதை எதிர்பாராத காவல்துறையினர் தீயை அணைத்து, அவரை உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஜெயராமனுக்கு 60% தீ காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
A person came to file a petition at the Dharmapuri SP office premises set himself on fire