பாலாற்றில் வரப்போகும் புதிய தடுப்பணை! நிதி ஒதுக்கிய ஆந்திர முதல்வர்! - எடப்பாடி பழனிச்சாமி தகவல்.
A new dam to come in Palar Chief Minister of Andhra Pradesh allocated funds
அணையின் நீர் சேகரிப்பு அளவை உயர்த்த ரூ.120 கோடி! புதிய தடுப்பணை கட்ட ரூ.250 கோடி!
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை காட்டவும் உயரத்தை உயர்த்தவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே புதிதாக தடுப்பணை கட்டப் போவதாக அறிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு விடியலை தருவோம் என்று பசப்பு வார்த்தைகளை கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு இதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது.
ஆந்திராவில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஓஎஸ்ஆர் காங்கிரஸ் அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் பல்வேறு அணைக்கட்டும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. எந்த ஒரு மாநிலமும் தான் கீழ் பகுதி மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. தற்பொழுது ஆந்திர அரசு இதை எல்லாம் கடைப்பிடிக்காமல் தான் தோன்றித்தனமாக பல்வேறு கட்டுமான பணிகளை பாலாற்றின் குறுக்கே மேற்கொள்வது வேதனையை தருகிறது.
தமிழக எல்லையில் உள்ள ஆந்திர மாநிலம் குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் ஆந்திர மாநில முதல்வர் பேசும்போது, தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் கனகதாட்சியம்மன் கோவில் அருகே இருக்கும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் சேகரிக்கும் அளவை உயர்த்தப் போவதாக கூறியுள்ளார். இதற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
குடிப்பள்ளி என்ற இடத்திலும் சாந்திபுரம் என்ற இடத்திலும் நீர்த்தேக்கங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்பால் தமிழக விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
வட தமிழகத்தின் ஜீவாதாரமான பாலாறு மூன்று மாநிலங்கள் இடையே பாய்கிறது. கர்நாடகத்தின் நந்தி துர்கா மலையில் உருவாகி 93 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆந்திர மாநிலத்தின் குப்பம் மாவட்டத்தில் 33 கிலோமீட்டர் பயணிக்கிறது. பின்னர் நம்ம தமிழகத்தின் வாணியம்பாடி அருகே புல்லூரில் தடம் பதிக்கிறது. சென்னை அடுத்த கல்பாக்கம் அருகே வயலூரில் கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் பாலாற்றில் குறைந்தபட்சம் 80 டிஎம்சி தண்ணீர் உற்பத்தி ஆகிறது என்று அளவிடுகள் தெரிவிக்கின்றன. இதில் கர்நாடக 20 டிஎம்சியும் ஆந்திரா 20 டிஎம்சியும் தமிழகம் 40 டிஎம்சியும் தண்ணீர் பங்கீடு கொள்ள வேண்டும் என்பது மூன்று மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தம். ஆனால் தற்போது கூடுதல் நீர்த்தேக்கம் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்து வருவது தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். ஆந்திர அரசின் இந்த அதிரடி திட்டம் குறித்து நன்கு அறிந்தும் முதல்வர் மு.க ஸ்டாலினும் நீர்வள துறையும் எதிர்ப்பு தெரிவிக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன் என்று தெரியவில்லை.
திராவிடம் மாடல் திராவிட மாடல் என்று சொல்லி தமிழக மக்களை திசை திருப்பும் போக்கை இந்த விடியா அரசு உடனடியாக கைவிட வேண்டும். கும்பகர்ண தூக்கத்தை கைவிட்டு விட்டு உடனடியாக ஆந்திர அரசின் இந்த போக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்துகிறது. தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் இதற்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
A new dam to come in Palar Chief Minister of Andhra Pradesh allocated funds