கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையா..? சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு..!
A case has been filed in the Madras High Court demanding that the government should not provide jobs to the families of those who died in the Karur stampede
கடந்த 2025 செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி சனிக்கிழமையன்று த.வெ.க தலைவர் விஜய் பிரசார நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 10 குழந்தைகள் 13 ஆண்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்ததோடு, 110 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கி அப்போதைய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அத்துடன், கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் இணை பொது செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தற்போதும் இந்த வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக கட்சி வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்வராகவும், மற்ற நிர்வாகிகள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில், வரும் ஜூலை 10-ஆம் தேதி தேதி தமிழக முதல்வர் விஜய் கரூர் செல்லவுள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் அவர் தனிப்பட்ட முறையில் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ஒருவருக்கு அரசு வேலை வழங்க இருப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்படி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

''அரசியல் பேரணிகள் மற்றும் கூட்டங்களின் போது உயிரிழந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கான விதிகள் எதுவும் இல்லை.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அந்த விசாரணையை நீர்த்துப் போக செய்யும். சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாற வாய்ப்புள்ளது.
எனவே, சிபிஐ விசாரணை நிறைவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கூடாது'' என மனுவில் குறிப்பிட்டுள்ளார். குறித்த மனு வேதனை விசாரணை விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவுள்ளது.
English Summary
A case has been filed in the Madras High Court demanding that the government should not provide jobs to the families of those who died in the Karur stampede