திருவண்ணாமலையில் பரபரப்பு... ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.86 லட்சம் கொள்ளை..!!
86lakh rupees stolen from 4 ATM centers in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டம் மணலூர் பேட்டை சாலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு சில மர்ம நபர்கள் வெல்டிங் மெஷினை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அந்த ஏடிஎம்மில் இருந்த ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை நகர போலீசார் ஏடிஎம்மில் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இந்த ஏடிஎம் மையத்திலிருந்து ரூ33 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதி வில்வாராணி சாலையில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம் மையத்திலிருந்து சுமார் ரூ.3 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்திலிருந்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 4 ஏடிஎம்களில் சுமார் ரூ.86 லட்சம் ஒரே இரவில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக சேத்துப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
86lakh rupees stolen from 4 ATM centers in Tiruvannamalai