நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் மோதி கார் கவிழ்ந்து விபத்து - 8 வயது சிறுமி பலி, 7 பேர் காயம்
8 years old girl died and 7 injured in car overturns in Tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்தார் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.
சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் ராஜா(47). இவர் நேற்று முன்தினம் மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் என எட்டு பேருடன் காரில் திருப்பதிக்கு சென்றார். இதையடுத்து சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து மீண்டும் சென்னை நோக்கி நள்ளிரவு காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருத்தணி அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்து அறிவிப்பு பலகையில் மோதி, கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் 8 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ராஜாவின் 8 வயது மகள் யாழினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று பேர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
8 years old girl died and 7 injured in car overturns in Tiruvallur