நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்..கலெக்டர் தகவல்!
50 percent subsidy for setting up a country chicken farm Collectors information
நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீதம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனாஅழைப்புவிடுத்துள்ளார்.
கால்நடைகள் வளர்ப்பிக்கு தமிழக அரசு மானியம் வழங்கி கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து வருகிறது.இந்த திட்டங்கள் மூலம் பொதுமக்கள் பயனடைந்துவருகின்றனர்,குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான 10 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் 2025-26-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இத்திட்டத்தில் நாட்டுக்கோழிப்பண்ணைகள் நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை, கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் மாநில அரசால் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து வழங்கப்படும்.
பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். பயனாளியிடம் கோழிக்கொட்டகை கட்ட குறைந்த பட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும்.விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் பயனாளிகள் தாழ்த்தப்பட்ட/ பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
தகுதிவாய்ந்த விருப்பமுள்ள பயனாளிகள் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, நில உரிமை ஆவணம், தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்களுடன் அருகிலுள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பம் அளித்து பயனடையலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
50 percent subsidy for setting up a country chicken farm Collectors information