காவல் நிலைய ஓய்வறையில் ரூ.15 ஆயிரம் மாயம்... கண்காணிப்பு கேமராவில் சிக்கிய காவலர்...!
15000 missing from police station restroom Cop caught on surveillance camera
செங்கல்பட்டு அனைக்கட்டு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கிடையே நடந்ததாக கூறப்படும் பணத் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக காவலர்களின் பணத்தை அபகரித்ததாக கண்டறியப்பட்ட காவலர் மீது உடனடி நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணிநிமித்தமாக அனைக்கட்டு காவல் நிலையத்திற்கு வந்திருந்த காவலர் செல்வகுமார், அங்குள்ள ஓய்வு அறையில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பெண் காவலர் வைத்திருந்த ரூ.5 ஆயிரமும், உதவி ஆய்வாளர் வைத்திருந்த ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.15 ஆயிரம் காணாமல் போனது. இதையடுத்து, பணம் மாயமானது குறித்து காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, காவலர் செல்வகுமார் சக காவலர்களின் ரூ.15 ஆயிரத்தை எடுத்துச் சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து, சம்பவம் தொடர்பான தகவல் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, காவலர் செல்வகுமார் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரை ஆயுதப்படைப் பிரிவுக்கு மாற்றி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
காவல் நிலையத்திலேயே சக காவலர்களின் பணம் திருடப்பட்டதாக வெளியாகியுள்ள இந்த சம்பவம், மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
15000 missing from police station restroom Cop caught on surveillance camera