நார்வே செஸ்ஸில் புதிய சரித்திரம்...! - பிரக்ஞானந்தாவின் மெகா வெற்றிக்கு முதல்வர் விஜய் வாழ்த்து...!
New history Norway chess Chief Minister Vijay congratulates Praggnanandha his mega victory
சர்வதேச செஸ் உலகில் இந்தியாவின் புகழை மேலும் உயர்த்தும் வகையில், இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் 2026 தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் நார்வே செஸ் தொடரில் கோப்பையை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற அரிய பெருமையையும் அவர் தனதாக்கியுள்ளார்.

20 வயதான பிரக்ஞானந்தா, தொடரின் இறுதிச்சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த வின்சென்ட் கீமரை திறமையான ஆட்டத்தின் மூலம் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை உறுதிப்படுத்தினார். அவரது துல்லியமான நகர்வுகளும், அசாத்தியமான யுக்திகளும் உலக செஸ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில், நார்வே செஸ் தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் அபாரமான அறிவாற்றல், தன்னம்பிக்கை மற்றும் ஆட்ட நுணுக்கத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக செஸ் அரங்கின் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சனை ஒரே தொடரில் இரண்டு முறை தோற்கடித்ததுடன், தொடர்ந்து நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று குறிப்பிடத்தக்க சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
தமிழகத்தின் திறமையையும், இந்தியாவின் அறிவுசார் வலிமையையும் உலக அரங்கில் உயர்த்திப் பிடித்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, எதிர்காலத்திலும் பல்வேறு சாதனைச் சிகரங்களை எட்டி, நாட்டிற்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்.இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New history Norway chess Chief Minister Vijay congratulates Praggnanandha his mega victory