மூன்றாவது முறை கோப்பையை வெல்லுமா? இன்னும் சற்று நேரத்தில் தொடங்கும் ஆட்டம்.!
ipl 2021 Qualifier2
14வது ஐபிஎல் டி20 தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்று இறுதிப் போட்டியில் நுழைவதற்கான இரண்டு ஆட்டம் ஷார்ஜாவில் இரவு ஏழு முப்பது மணி அளவில் தொடங்கவுள்ளது. இதில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும், மோர்க்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.
லீக் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த டெல்லி கேப்பிடல் அணி, இறுதிப் போட்டிக்கான முதல் சுற்றில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்தது. இதனையடுத்து இன்று குவாலிபயர் 2 -ல் கொல்கத்தா அணியுடன் மோத உள்ளது.
கொல்கத்தா அணியை வீழ்த்தி 2-வது முறையாக ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் டெல்லி அணி செல்லுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பம் முதலே டெல்லி கேப்பிடல் அணி சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், நிச்சயம் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற நம்பிக்கையில் அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதேபோல், கொல்கத்தா அணி கடந்த இரண்டு முறை 2012 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும் பட்சத்தில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்லும். மேலும், மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்து வருகிறது.