சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி! இங்கிலாந்தில் முத்திரை பதித்து அபார ஆட்டம்!  - Seithipunal
Seithipunal


இந்தியா இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 4 நாள் ஆட்டம் கொண்ட ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் நடந்தது. இந்த போட்டியில் சரிவிலிருந்து மீண்ட இந்திய அணியானது ஆட்டத்தினை  முடித்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 121.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் நைட் 95 ரன்னும், பியூமாண்ட் 66 ரன்னும் எடுத்தனர், அசோபியா டுங்லி 74 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய  பந்துவீசிய ஸ்நே ரனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்கள். 

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்த நிலையில், அறிமுக டெஸ்டிலேயே அதிரடியில் அசத்திய ஷபாலி வர்மா 96 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேற இந்த ஜோடி பிரிந்தது. 

ஷபாலி வர்மா ஆட்டமிழந்த வேகத்தில் மந்தனாவும் 78 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த வீராங்கனைகளில் தீப்தி சர்மா மட்டும் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்ட இந்திய அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் எக்கிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நைட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

165 ரன்கள் பின்தங்கிய நிலையில், பாலோ ஆன் பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போல இல்லை என்றாலும் சுமாரான தொடக்கம் மீண்டும் கிடைத்தது. மந்தனா 31 ரன்களில் ஆட்டமிழக்க, ஷபாலி வர்மா மீண்டும் சிறப்பாக ஆடி அரை சதமடித்தார். அவர் 63 ரன்னில் ஆட்டமிழந்தார். தீப்தி ஷர்மா 54 ரன்னும், பூனம் ராவத் 39 ரன்னும் எடுத்தனர். 

இந்த நிலையில் அணியின் மூத்த வீரர்களான மித்தாலி ராஜ், ஹர்மான்ப்ரீத் கவுர் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று இந்திய அணியின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது போலவே இருந்தது. ஆனால் அதன்பிறகு தான் யாரும் எதிர்பாராத அதிசயம் நடந்தது. 

8 விக்கெட் வீழ்ந்த நிலையில் களமிறங்கிய ஸ்நே ரானா பொறுப்புடன் ஆடி 80 ரன்னுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, அவருக்கு ஒத்துழைப்பு அளித்த டனியா பாட்டியா 44 ரன்னுடன் களத்தில் நின்றார். இந்த ஜோடி 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் ஆட்டத்தை சமனில் முடித்து வைத்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் எடுத்து, 179 ரன்கள் முன்னிலையில் இருந்த போது ஆட்டம் சமனில் முடித்துக்கொள்ளப்பட்டது. இங்கிலாந்து சார்பில் எக்கிள்ஸ்டோன் 4 விக்கெட்டும், நடாலி சீவர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால் இரு அணிகளுக்கு இடையிலான 4 நாள் கொண்ட ஒரே ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டிக்கான ஆட்ட நாயகி விருது இரு இன்னிங்சிலும் அரை சதமடித்து அசத்திய அறிமுக வீராங்கனை ஷபாலி வர்மாவுக்கு அளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India's women team drawn match against England in England


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->