ஆசியக் கோப்பை: 2 வருடங்களுக்குப்பின் இந்திய அணியில் களமிறங்கும் பும்ரா?!
Asia cup Team india bumra
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. இதனால், இரு அணிகளும் குறைந்தது மூன்று முறை மோதும் வாய்ப்பு உள்ளது. தொடக்கத்தில், செப்டம்பர் 14 அன்று துபாயில் நடைபெறும் குழு சுற்று ஆட்டத்தில் இவை மோதுகின்றன.
இந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆசியக் கோப்பையில் பங்கேற்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்திய அணியின் இறுதி பட்டியல் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பும்ரா கடைசியாக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார். அதேபோல, 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதியில் தான் அவர் கடைசியாக 50 ஓவர் கிரிக்கெட்டில் களம் இறங்கினார். அதற்கு பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக, பும்ரா நீண்ட இடைவெளி எடுத்திருந்தார். குறிப்பாக, இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இல்லாமல் இந்திய அணி களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
இப்போது பும்ரா மீண்டும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் திரும்புவார் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி பந்துவீச்சு பிரிவில் அவர் மீண்டும் இணைவது, அணியின் வலிமையை அதிகரிக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.
வரும் செவ்வாய்க்கிழமை அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு கூடவுள்ளது. அப்போது, ஆசியக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Asia cup Team india bumra