மலைக் குன்றின் மீது சிவலிங்கம்.. தங்கக்கலசம்..அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்.!
Today special vaitheeyanathar temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள பரளி என்னும் ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
பீட் மாவட்டத்தில் இருந்து சுமார் 92 கி.மீ தொலைவில் உள்ள பரளி என்னும் ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் இதுவும் ஒன்று. இத்தலத்தில் சிவபெருமான் மலைக் குன்றின் மீது மருந்தீசர் என்ற திருநாமத்துடன் அமர்ந்து உள்ளார்.
இத்தலத்தில் உள்ள அம்மையும், அப்பனும் மருந்துகளுடன் அமர்ந்து உலக உயிர்களை ரட்சிக்கின்றனர் மற்றும் மக்களின் தீராத வினைகளைத் தீர்த்து வைக்கின்றனர் என்பது நம்பிக்கை.
இது நோய் தீர்க்கும் கோயில் என்பதால் இத்தல மூலவர் வைத்தியநாதம் என்ற பெயர் பெற்றார்.
விநாயகர், கார்த்திகேயர், வீரபாகு, நந்தி, ஐயப்பன், திருமால், காளி ஆகிய பரிவார மூர்த்திகள் இத்தலத்தில் உள்ளனர்.
வேறென்ன சிறப்பு?
இத்தலத்தில் 21 பரிவார தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன.
வைத்தியநாதம் கோயில் ஒரு சிறு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வடக்குப்பக்கமும், கிழக்குப்பக்கமும் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன.
கோயில் கோபுரம் அறைக்கோள வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் மீது தங்கக்கலசம் உள்ளது.
இக்கோயிலில் வைத்தியநாதர் அழகிய லிங்கவடிவில் காட்சி தருகிறார். கர்ப்பகிரகத்தின் உள்ளே சென்று வைத்தியநாதரை தொட்டு அபிஷேகம் மற்றும் ஆராதனை முதலிய வழிபாடுகளைச் செய்யலாம்.
ஆடி மாதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கங்கை நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களை காவடிபோல் சுமந்து கொண்டு, சுல்தான் கஞ்ச் என்னுமிடத்திலிருந்து கால்நடையாகவே இக்கோயிலுக்கு வருவார்கள்.
இத்தல வைத்தியநாதரை பிரார்த்தனை செய்வதால் ஜோதிர்லிங்கம் தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
சிவராத்திரி, நவராத்திரி, ஹோலிப்பண்டிகை, தீபாவளி, கார்த்திகை முதலிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
இங்கு ஜனவரி பஞ்சமி மேளா, மார்ச் மகா சிவராத்திரி, பௌர்ணமி ஆகியவை முக்கிய விழாக்களாகும்.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
இங்கு மருந்தையே மலைபோல் குவித்து, அக்குன்றின் மீது அம்மையும், வைத்தியநாதரும் ஜோதிர்லிங்கமாக அமர்ந்து இருப்பதால், உயிர்களின் தீராத உடற்பிணியையும், தீராத சகல நோய்களையும் தீர்த்து வைப்பார்கள் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அபிஷேகம் செய்தும், அர்ச்சனை செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
English Summary
Today special vaitheeyanathar temple