சாய்ந்த நிலையில் மூலவர்.. லிங்க வடிவில் ஆனந்தவல்லி.. அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்.!
Today special sundharamahalinga swamy temple
இந்த கோயில் எங்கு உள்ளது?
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலையில் அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
விருதுநகரில் இருந்து சுமார் 44 கி.மீ தொலைவில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து 10 கி.மீ நடந்து சென்றால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக, சற்று சாய்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலைகள்) வீதம், பதினாறு கிரிகள் சமமாக, சதுரமாக அமைந்துள்ள காரணத்தால் இம்மலை சதுரகிரி என்று பெயர் பெற்றது.
இங்கு மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மலையேறும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் உள்ளன.
மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயமாக உள்ளது தனிச்சிறப்பு.
இக்கோயிலில் 18 சித்தர்களுக்கு சிலை உள்ளது. இங்கு செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.
வேறென்ன சிறப்பு?
இக்கோயிலில் அம்மன், ஆனந்தவல்லி என்ற திருநாமத்தில் லிங்க வடிவில் எழுந்தருளுகிறாள். மூலவரான சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் ஆனந்தவல்லி சன்னதி உள்ளது.
இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை பெரிய மகாலிங்கம் என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது.
இங்குள்ள மூலிகைகளும், அருவி நீரும் பல நோய்களை தீர்க்கவல்லவை.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி, மகா சிவராத்திரி, நவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
English Summary
Today special sundharamahalinga swamy temple