செல்வங்களை அள்ளி தரும் செவ்வாய்க்கிழமையில்.. நல்ல காரியங்களை செய்யலாமா?
sevvay kizhamai is special or bad day
செவ்வாய்க்கிழமைகளில் நல்ல காரியங்களை செய்யலாமா? செய்யக்கூடாதா? என்கின்ற கேள்விக்கு நம்மில் பலருக்கும் நீண்ட நாட்களாகவே பதில் தெரியாமல், சந்தேகத்துடனேயே செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து விடுகிறோம். இந்த சந்தேகம் இன்று நேற்று அல்ல, பல ஆண்டுகளாகவே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நாள், கிழமை பார்த்து செய்கின்ற காரியம் பாதி வெற்றியை தரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை அதுவுமா புது புடவை கட்டலாமா? நாளைக்கு கட்டலாமே.. செவ்வாய்க்கிழமையில் போய் புதுசா வேலை செய்யலாமா? வேற நல்ல நாளில் தொடங்க கூடாதா? என்று புது ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருட்கள் வாங்குவது வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு. எல்லா விஷயங்களுக்கும் இப்படி நாளும், கிழமையும் பார்க்கலாமா? என்று நினைத்ததை, நினைத்தபடி நடத்துபவர்களும் உண்டு.
செவ்வாய்க்கிழமை நல்ல தினம் தானா?
செவ்வாய்க்கிழமையும் உகந்த நாள் தான். நவகிரகங்களுள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகம் ஆகும். கிரகங்களில் செவ்வாய் என்பது மங்கலகாரகன் என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்றாலே மங்கலகரமான வார்த்தை என்று முன்னோர்கள் சொல்வார்கள்.
செவ்வாய்க்கிழமை அன்று எதையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனை அனுபவிக்கவே முடியாது என்றும் சொல்வதுண்டு.
முருகப்பெருமானுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை தான். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
செவ்வாயையும், முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாய்க்கிழமையில் மங்கலப்பொருட்கள் வாங்கினால் செல்வம் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லா சிறப்புகளும் தேடி வரும்.
மௌன விரதம் :
செவ்வாய்க்கிழமை அன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை ஒருவர் அடையலாம்.
அதாவது செவ்வாய்க்கிழமை அன்று எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது. அப்படி விவாதம் செய்தால் அது நிச்சயம் தீமையில் சென்று முடியும். அதனால் தான் செவ்வாயோ, வெறும் வாயோ என்று அன்றைய தினம் விவாதம் செய்யாமல் மௌன விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
சீக்கிரம் கடன் அடையும் :
இயற்கையிலேயே செவ்வாய் பகவான் விசுவாசம் நிறைந்த பணியாளாக இருந்தாலும் மூர்க்க குணம் நிறைந்தவர். எதை பற்றியும் கவலைப்படாமல், எதையும் யோசிக்காமல் வேகமாக செயல்படக்கூடியவர்.
செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யும் செயல்கள் தொடரும் என்பதால் தான் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி தரும் போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பரிகாரம் :
செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம், ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி போன்றவற்றை செய்யலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று பூமி பூஜை செய்வது நல்லது என்று மனையடி சாஸ்திரம் கூறுகிறது.
பயணங்களில் கிழக்கு திசை நோக்கிய பயணம் செவ்வாய்க்கிழமை அன்று இருந்தால் உறுதியான வெற்றியை தரும்.
அதனால் இனி செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து விடாமல், எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தி கொள்ளுங்கள்...!
English Summary
sevvay kizhamai is special or bad day