தினம் ஒரு திருத்தலம்.. பழனி முருகன்.. பங்குனி உத்திரத்தில் வழிபடுவோம்..!!
palani murugan temple
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் - பழனி
அமைவிடம் :
பழனி முருகன் கோவில் (திருஆவினன்குடி) முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடு ஆகும். இது தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
எப்படி செல்வது?
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், உடுமலைப் பேட்டை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.
அடிவாரத்திலிருந்து இந்த மலை மீது ஏறுவதை எளிமையாக்கும் வகையில் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இரவு மற்றும் பராமரிப்பு பணிகள் இடைவேளைத் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் ரோப் கார் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கோவில் சிறப்பு :
இந்த கோவில் முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. சிலை உயிர்ப்புள்ளது என்பதும், சிலைக்கு வியர்க்கும் என்பதும் ஐதீகம். அந்த வெப்பத்தை தணிக்க கொடுமுடித் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.
இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இவர் கையில் உள்ள தண்டம் மிகவும் அருள் வாய்ந்தது.
கோவில் திருவிழா :
பழனி முருகன் கோயில், திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பூசம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து இந்தக் கோயிலுக்கு வந்து செல்வதை வரமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் தங்கத் தேர் வழிப்பாடு சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
வேண்டுதல் :
குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக, தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்த கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன் :
முருகனுக்கு காவடி எடுத்தும், பால், பன்னீர் அபிஷேகம் செய்வித்தும், அலகு குத்தியும், முடிக்காணிக்கை செலுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். இந்த கோயிலில்தான் தமிழகத்தில் முதன்முதலாக பக்தர்கள் வேண்டுதல்கள் நிமித்தமாக அலகு குத்துதலும்;, காவடி எடுக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
கோவில் பிரசாதம் :
பஞ்சாமிர்தம் - மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம். தமிழ்நாட்டில் முதன்முதலாக திருக்கோயில் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு பெற்ற பெருமை பழனி பஞ்சாமிர்த பிரசாதத்தையே சாறும்.