காதல் திருமணம் யாருக்கு நடக்கும்?
love marriage
காதல் திருமணம் அல்லது காந்தர்வ திருமணம் என்பது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்களுக்கு பிடித்த ஒருவரை விரும்பி அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் உறவாகும். சில நேரங்களில் பெரியோர்களின் சம்மதம் அல்லது அவர்களின் சம்மதம் இன்றியும் மனம் ஒத்த இவர்கள் தங்கள் திருமணத்தை நிகழ்த்திக் கொள்கின்றனர்.
காந்தர்வ திருமணம் செய்வோருக்கு பொருத்தம் என்பது வேண்டியதில்லை என்று மூல ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், திருமணத்தில் முதன்மையானது, மனப்பொருத்தமே.
காந்தர்வ திருமணத்தில் தங்கள் குலம், பழக்க வழக்கம் மற்றும் பெற்றோர்களின் எண்ணம் அவர்கள் தங்களின் மீது கொண்டுள்ள அனைத்து கனவுகளையும் புறம் தள்ளி தங்களது விருப்பங்களுக்கு முதன்மையான பங்கினை அளித்து ஏற்படுத்திக் கொள்ளும் உறவாகும்.
ஒருவருக்கு நடைபெறும் திருமணம் என்பது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா அல்லது அவர்களின் விருப்பத்தின் பெயரில் நடைபெறும் திருமணமா என்பதை ஜாதகத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ள இயலும். ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கின்ற கிரக நிலைகள் அவர்களின் வாழ்க்கை நிலையையும் அவர்களுடைய வாழ்க்கைத் துணையையும் நிர்ணயம் செய்கின்றன.
சிலரின் வாழ்க்கையில் காந்தர்வ திருமணம் என்பது வெற்றியை அளிக்கும் பட்சத்தில் சிலருடைய வாழ்க்கையில் காந்தர்வ திருமணம் அவர்களது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றன. இவையாவும் அவர்கள் பிறந்த நிலையில் இருக்கின்ற கிரக நிலைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன.
ஜோதிடத்தில் ஒருவருக்கு எழும் எண்ணங்கள் அவருடைய ஜாதகத்தில் உள்ள பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து அறிந்து கொள்ளப்படுகின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வலிமையான கிரகங்கள் இருந்தாலும் அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுத்து இருந்தாலும் அவர்கள் காதல் புரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன.
ஒருவருடைய ஜாதகத்தில் களத்திர காரகனான சுக்கிரன், ராகு, கேது, சனி இவர்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் காதலில் விழுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமும், களத்திர ஸ்தானமும், பாக்கிய ஸ்தானமும் ஏதேனும் ஒரு விதத்தில் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்கள் காதலில் விழுந்து திருமணம் புரிவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.