கண் சார்ந்த நோய்கள் நீங்க.. ஆவணி ஞாயிறு ஏன் சிறப்பு பெறுகிறது?
Avani ngayiru special viratham
ஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் பற்றி தெரியுமா?
ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்த பின்பு வரும் ஞாயிற்றுக்கிழமைகள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக காணப்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா?
ஆவணி மாதத்தில் சூரியன் சிம்ம வீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்ம வீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தை தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாக பெரியோர்கள் சொல்வார்கள்.
அர்ஜுனனுக்கு ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது. 'ஞாயிறு என்றாலே சூரியன்".
ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேக நலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷமானது.
ஆவணியில் பயிர்கள் வளர ஆரம்பிக்கும். பூச்சிகள், பாம்புகள் தொல்லை அதிகரிக்கும். இவற்றால் விவசாய பணிகளுக்கு செல்லும் தங்கள் கணவருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக, ஆவணி ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் விரதத்தை அனுஷ்டித்து வந்தனர். இதன் காரணமாக ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
ஆவணி ஞாயிறு விரதம் :
திருமணமாகாத பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியம் வேண்டியும் அனுஷ்டிப்பது ஆவணி ஞாயிறு விரதம். இந்நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம். நமது கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி இந்த நாளில் வேண்டி கொள்ளலாம். வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க ஆண்கள் இந்நாளில் விரதம் மேற்கொள்ளலாம்.
கண் பிரச்சனைகள் நீங்கும் :
ஆவணி ஞாயிறு விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுபடலாம் என்பது ஐதீகம்.
சூரிய ஓரை :
ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6-7 மணி வரை சூரிய ஓரை தான் இருக்கும். இந்த நேரத்தில் நாம் வணங்கும் பிரார்த்தனைகள் சூரிய பகவான் நமக்கு பலிக்க செய்வார் என்பது ஐதீகம்.
சூரிய நமஸ்காரம் :
சூரியன் உதயமாகும் கிழக்கு திசை நோக்கி அன்றைய நாளில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய மந்திரங்கள், சூரிய காயத்ரி மந்திரம் போன்றவற்றை உச்சரித்து சூரியனின் அருளை முழுமையாகப் பெற்றுக் கொள்ளலாம்.
நவகிரக சூரியன் :
ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் கோவிலுக்கு சென்று நவகிரகத்தில் இருக்கும் சூரியனாருக்கு செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். அன்றைய நாளில் கோதுமையால் செய்த இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்யலாம்.
ஆவணி மாதத்தில் வரும் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து, கோதுமை தானம் செய்து வரலாம்.
English Summary
Avani ngayiru special viratham