மாவட்டம் தோறும் மனைவி… நகைக்காக திருட்டு...! - 22 பெண்களை ஏமாற்றிய பல பெயர் கொண்ட ஆசாமி கைது...!
Every District Stealing Jewelry for Wife Man Multiple Aliases Who Cheated 22 Women Arrested
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 7 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த விசாரணையில், வட்டியூர்க்காவை சேர்ந்த 56 வயதான பாகுலேயன் என்பவரே இந்த நகை பறிப்பு சம்பவத்தின் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. மேலும், காவலர்கள் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாக இருந்த நிலையில், நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து சிக்கினார்.

இந்த காவல் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. மனைவிகளை மகிழ்விக்க நகைகள் தேவைப்பட்டதால் தான் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் “ஒரே மனைவி அல்ல, மாவட்டம் தோறும் மனைவிகள் இருக்கிறார்கள்” என்று கூறியதும் காவலர்கள்அதிர்ச்சி அடைந்தனர்.
கணவனை இழந்தவர்கள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை குறிவைத்து ஏமாற்றி திருமணம் செய்து வந்த பாகுலேயன், திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை மணந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஒவ்வொரு இடத்திலும் தாஸ், ராஜன், விஜயன், பாபு, சுந்தரன், கல்யாணராமன் என பெயரை மாற்றி வாழ்ந்து வந்துள்ளார்.மேலும் வீடுகள் பூட்டப்பட்டிருக்கும் நேரத்தை கண்காணித்து திருட்டு செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.
அவர்மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து பாகுலேயனை ஆற்றிங்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
மேலும், 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இந்த “பல முகம் கொண்ட” நபரின் செயல்கள் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Every District Stealing Jewelry for Wife Man Multiple Aliases Who Cheated 22 Women Arrested