தேமுதிக யாருடன்? ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’...! - அரசியல் அரங்கில் பிரேமலதா குறிப்பு
With whom DMDK ally When Tamil month Thai arrives way open up Premalatha remark political arena
தமிழக அரசியலில் கருணாநிதி – ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், 2005 செப்டம்பர் 14-ம் தேதி நடிகர் விஜயகாந்த் தொடங்கிய கட்சிதான் தேமுதிக. தொடங்கிய ஆறே மாதத்தில் 2006 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்தது.

விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் மட்டும் வென்றாலும், 8.4% வாக்குகள் பெற்று ‘புதிய அரசியல் சக்தி’ என முத்திரை பதித்தது.2009 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி இல்லையெனினும் வாக்கு சதவீதம் 10.3 ஆக உயர்ந்தது. 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 இடங்களில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்று, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும், எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் விஜயகாந்த் பெற்றார்.
ஆனால் அதன்பின் தேமுதிகவின் அரசியல் பயணம் சரிவை நோக்கி சென்றது.2014-ல் பாஜக கூட்டணி, 2016-ல் மக்கள் நல கூட்டணி, 2021-ல் அமமுக கூட்டணி என தொடர்ச்சியான தோல்விகள் வாக்கு சதவீதத்தை கடுமையாகக் குறைத்தன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியிலும் தேமுதிக வெற்றியைப் பெற முடியவில்லை.விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தேமுதிக சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது.
கட்சியை மீண்டும் எழுச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது உள்ளது. இந்த நிலையில், கடலூரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் அவர் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், “கூட்டணி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது… அவசரம் வேண்டாம்… தை பிறந்தால் வழி பிறக்கும்” என கூறி பிரேமலதா சஸ்பென்ஸ் வைத்தார். இதனால் தேமுதிக யாருடன் கைகோர்க்கும் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
தேமுதிக வட்டார தகவல்களின்படி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2011-ல் வழங்கப்பட்ட 41 தொகுதிகளை தேமுதிக கோரிய நிலையில், அதிமுக தரப்பு 8 முதல் 10 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
With whom DMDK ally When Tamil month Thai arrives way open up Premalatha remark political arena