திமுக–காங்கிரஸ் கூட்டணி முறிவா? 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்..காங்கிரஸ் ஷாக்!
Will the DMK Congress alliance break Only 24 hours left Stalin dead line to Rahul Gandhi Congress shocked
தமிழக அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடித்துள்ள நிலையில், திமுக–காங்கிரஸ் கூட்டணியில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் நீடிக்கும் இழுபறி காரணமாக, காங்கிரஸ் தனது இறுதி முடிவை அறிவிக்க மார்ச் 3-ம் தேதி வரை மட்டுமே காத்திருக்க திமுக முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ‘டெட்லைன்’ பின்னால் மாநிலங்களவை இடைத்தேர்தல் கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் 16-ம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், மார்ச் 5-க்குள் வேட்பாளர்களைத் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் திமுகக்கு உள்ளது. கூட்டணி சமன்பாடு தெளிவாகாத வரை, ராஜ்யசபா சீட் யாருக்கு என்பது முடிவாகாது என்பதால், மார்ச் 3-ஐ இறுதி நாளாக குறித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தரப்பில் “தேர்தல் நெருங்கும் நேரத்தில் இழுபறி நீடித்தால் அது களப்பணியை பாதிக்கும்; காங்கிரஸின் பதிலுக்காக முடிவில்லாமல் காத்திருக்க முடியாது” என்ற மனநிலை நிலவுகிறது. மார்ச் 3-க்குள் காங்கிரஸ் சமரச நிலைப்பாட்டுக்கு வராவிட்டால், ‘பிளான் பி’ அமலுக்கு வரும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
டெல்லி தகவல்களின் படி, காங்கிரஸ் மேலிடத்திலும் கடும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. ராகுல் காந்தி திமுகவுடன் உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதாகவும், சுமார் 99 சதவீதம் கூட்டணியை முறிக்கத் தயாராக உள்ளார் எனவும் கூறப்படுகிறது. மீதமுள்ள 1 சதவீதம் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் சமரச முயற்சிகளால் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதற்கு காரணமாக காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் கிரீஷ் சோடங்கரின் விளக்கங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அறிவாலயத்தில் நடைபெற்ற 45 நிமிட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பு ‘பவர் ஷேரிங்’ விவாதத்தையே மறுத்ததாகவும், “அசெம்ப்ளி சீட் மட்டும் பேசுவோம்” எனக் கறாராக இருந்ததாகவும் ராகுலிடம் விளக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் பின்னணியில் சமீபத்திய சமூக ஊடக பரிமாற்றங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன. வழக்கமாக “மை டியர் பிரதர்” என உரையாடும் ராகுல் காந்தி, இந்த முறை முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் ‘ஃபார்மல்’ வாழ்த்து மட்டுமே தெரிவித்தார். அதற்கு பதிலாக ஸ்டாலினும் மிகச் சுருக்கமான நன்றியை மட்டுமே தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில், 20 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுக–காங்கிரஸ் கூட்டணி இப்போது மிக முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது. மார்ச் 3-க்கு பிறகு என்ன நடக்கும்? கூட்டணி தொடருமா, அல்லது தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகள் உருவாகுமா? என்பதை தீர்மானிக்கும் நாட்களாக அடுத்த சில தினங்கள் மாறியுள்ளன.
English Summary
Will the DMK Congress alliance break Only 24 hours left Stalin dead line to Rahul Gandhi Congress shocked