ஒன்று சேருமா அதிமுக...? மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்...! - எடப்பாடிக்கு தூதுவிடும் எஸ்.பி.வேலுமணி
Will AIADMK unite We ready talks again SP Velumani sends envoy Edappadi
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒரு அணியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார். மற்றொரு அணியாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், “பதவி பேராசையில் மூழ்கியோரின் கீழ்த்தர நடவடிக்கைகளை கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஒன்றிணைந்து முறியடிப்போம்” என்று எடப்பாடி பழனிசாமி நேற்று கடுமையான அறிக்கை வெளியிட்டிருந்தார்.
எஸ்.பி.வேலுமணி
இதற்கு பதிலடியாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள பதிவில், “கழகத்தின் உண்மை நிலையை இன்றளவும் புரிந்து கொள்ளாமல் பொதுச்செயலாளர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருப்பது வேதனையை அளிக்கிறது. தேர்தல் களத்தில் எடப்பாடியாரின் உழைப்பை எவரும் மறுப்பதில்லை.
ஆனால் கூட்டணி விவகாரங்களிலும், தேர்தல் வியூகங்களிலும் யாருடனும் ஆலோசிக்காமல் முழுமையான தனிநிலை முடிவுகள் எடுக்கப்பட்டன. அதை நாங்களும் தம்பிகளாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டோம்.ஆனால் தேர்தல் தோல்விக்குப் பிறகு, தலைமை பொறுப்பில் இருப்பவர் அனைவரையும் அணுகி கலந்துரையாட முன்வந்திருக்க வேண்டும்.
அதற்கு பதிலாக, ‘நான் மட்டுமே முக்கியம்’ என்ற மனப்பாங்கில் தொடர்ந்து செயல்படுவது உணர்வுள்ள எந்தக் கழகத் தொண்டராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.கழகத்தின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த மனநிலையே இதுவாகும்.
மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்தே நாங்கள் அரசியல் நடைமுறைகளை முன்னெடுத்து வருகிறோம்.மக்கள் ஆதரவை பெற்ற தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பது அரசியல் நாகரிகத்தின் அடிப்படையிலான முடிவாகும். இதில் யாரையும் அவமதிக்கும் நோக்கமோ, கழகத்தை பிளவுபடுத்தும் எண்ணமோ எவருக்கும் இல்லை.
இப்போதும் நீங்கள் அழைத்தால் பேசத் தயாராக உள்ளோம். தோல்விக்கான காரணங்களை ஒன்றிணைந்து ஆராய்வோம். கழகத்தின் எதிர்காலப் பயணத்தை அனைவரும் சேர்ந்து தீர்மானிப்போம்.
‘எந்தத் தியாகத்திற்கும் தயாராக இருக்கிறேன்’ என்று நீங்கள் கூறியுள்ள நிலையில், எங்களின் ஒரே வேண்டுகோள் எப்போதும் போல ‘போங்க போங்க’ என்று புறக்கணிக்காமல், ஒருமுறை ‘வாங்க வாங்க’ என்று அழைத்து பாருங்கள்... அனைத்தும் மாறும்; கழகமும் வலுவாகும்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Will AIADMK unite We ready talks again SP Velumani sends envoy Edappadi