ரூ.100 கோடி எங்கே...? முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த 'சம்மன்'...! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Where 100 crore Former Minister Sivashankar summons Court orders action
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பெயரை சுற்றி வெடித்துள்ள வேலைவாய்ப்பு மோசடி விவகாரம் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனைகள், வேலை வாங்கித் தருவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகள், எப்ஐஆரில் இடம்பெற்றுள்ள முக்கிய குறிப்புகள் என இந்த வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் நெருங்கிய உதவியாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அரசு வேலை வாங்கித்தருவதாக பலரிடம் நம்பிக்கை ஏற்படுத்தி பெருமளவில் பணம் வசூலித்ததாக இளஞ்செழியன் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த புகார்களின் அடிப்படையில் காவலர்கள் இளஞ்செழியனை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, “இளஞ்செழியன் யார் என்றே எனக்கு தெரியாது” என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் விசாரணையில் வெளியாகும் புதிய தகவல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.குறிப்பாக, சுமார் ரூ.100 கோடி வரையிலான பணமோசடி பரிவர்த்தனைகளில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.மேலும், “கொடுத்த பணம் சரியான இடத்தை சென்றடைந்துவிட்டது; வேலை உறுதி” என்று சிவசங்கர் தரப்பிலிருந்து உறுதி அளிக்கப்பட்டதாகவும், அந்த நம்பிக்கையிலேயே பலர் பணம் வழங்கி பின்னர் ஏமாற்றமடைந்ததாகவும் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், போக்குவரத்துத் துறையில் தனது மகனுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாக ஓய்வுபெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவர் தலைமைச் செயலகத்தில் நேரடியாக சிவசங்கரை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசு வேலைவாய்ப்பு பெயரில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த மிகப்பெரிய பணமோசடி வழக்கில், எப்ஐஆரில் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதனால், விசாரணையின் அடுத்த கட்டத்தில் மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வழக்கு தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக மாறியுள்ளது.
English Summary
Where 100 crore Former Minister Sivashankar summons Court orders action