‘விஜய்யை குறைத்து மதிப்பிட்டோம்; தொண்டர்களை புறக்கணித்தோம்’ – திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராய திமுக அமைத்த 19 இரு நபர் கள ஆய்வுக் குழுக்கள், மாநிலம் முழுவதும் நேரடி ஆய்வு மேற்கொண்டு தங்களது விரிவான அறிக்கையை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிக்கையில், கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி, அடிமட்டத் தொண்டர்களின் புறக்கணிப்பு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சியை சரியாக மதிப்பிடத் தவறியது உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி வட்டாரங்களின் தகவலின்படி, “விஜய்யின் வளர்ச்சியை நாம் கண்டிக்கவில்லை; கட்சிக்குள் இருந்தே பலர் முதுகில் குத்திவிட்டனர்; கட்சியை விட அரசுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததே பின்னடைவை ஏற்படுத்தியது” என்ற தொண்டர்களின் ஆதங்கம் அறிக்கையின் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அறிக்கையில், நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேகமான எழுச்சியை திமுக தலைமை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் தவெகவுக்கு இருந்த ஆதரவு குறித்து அடிமட்டத் தொண்டர்கள் பல மாதங்களாக எச்சரித்தபோதும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அதை போதுமான அளவில் எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

மேலும், சமூக ஊடகங்களில் தவெக மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் திமுகவின் டிஜிட்டல் பிரச்சாரம் பலவீனமாக இருந்ததும் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் முக்கிய நலத்திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ கூட எதிர்பாராத வகையில் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற்றிருந்தாலும், தகுதி இருந்தும் பயனாளிகளாக சேர்க்கப்படாத பெண்களிடம் அதிருப்தி அதிகரித்ததாகவும், திட்டத்தின் பயனாளிகளில் கணிசமானோர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்ற தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், அரசு நிர்வாகத்தை அதிகாரிகள் மையப்படுத்தியதால், அடிமட்டக் கட்சி அமைப்பு பலவீனமடைந்ததாகவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் அரசின் திட்டங்களாக மட்டுமே முன்னிறுத்தப்பட்ட நிலையில், உள்ளூர் கட்சி நிர்வாகிகளின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், இதனால் மக்களுக்கும் கட்சிக்கும் இடையிலான நேரடி தொடர்பு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் உத்திகளை வகுப்பதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வெளிப்புற ஆலோசகர்களை அதிகம் நம்பியதும் அடிமட்டத் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொண்டர்களின் கருத்துக்களை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான சிலரின் செல்வாக்கு அதிகரித்ததும், கட்சி உள்விவகாரங்களில் அவர்களின் தலையீடும் உட்கட்சி மோதல்களை அதிகரித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக, அரசு நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்திய வேகத்தில், கட்சியின் உயிர்நாடியான அடிமட்டத் தொண்டர்களையும் புதிய அரசியல் மாற்றங்களையும் திமுக தலைமை கவனிக்கத் தவறியதே இந்தத் தேர்தல் தோல்விக்கான முக்கிய காரணம் என கள ஆய்வுக் குழு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை திமுகவுக்குள் விரிவான சுயபரிசோதனைக்கும், எதிர்கால மறுசீரமைப்புக்கும் வழிவகுக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We underestimated Vijay we ignored the cadres Reasons for DMK defeat Report on Stalin desk


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




சினிமா

Seithipunal
--> -->