அமைச்சர் நிர்மல் குமார் மனைவிக்கு மட்டும் வீட்டுக்கு பக்கத்தில் பணியிட மாற்றமா? சர்ச்சையில் சிடிஆர் நிர்மல் குமார் - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், தனது மனைவிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணியிட மாற்றம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறாத நிலையில், அமைச்சரின் மனைவிக்கு மட்டும் மாற்றுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக சக ஆசிரியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சிடிஆர் நிர்மல் குமாரின் மனைவி, சென்னை அருகே பல்லாவரம் பகுதியில் உள்ள மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. நிர்மல் குமார் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், சென்னை பசுமை வழிச்சாலையில் அவருக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டதாகவும், இதனால் அவரது மனைவி பள்ளிக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவருக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றங்கள் பொதுவாக கலந்தாய்வு முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக எமிஸ் தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் அமைச்சரின் மனைவிக்கு மட்டும் மாற்றுப் பணி வழங்கப்பட்டது எப்படி என ஆசிரியர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

மேலும், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனால் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதல் வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அமைச்சரின் மனைவி வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய இடத்திற்கு மாற்றாக புதிய ஆசிரியர் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமைச்சரின் மனைவி என்பதாலேயே அவருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டதா என்றும், இதேபோல் மற்ற ஆசிரியர்களுக்கும் உரிய விதிமுறைகளின்படி பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, சிடிஆர் நிர்மல் குமார் ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து, பின்னர் அங்கிருந்தும் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விஜய் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சர் நிர்மல் குமார் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், தற்போது அவரது மனைவியின் பணியிட மாற்றம் தொடர்பாக எழுந்துள்ள இந்தப் புதிய சர்ச்சை அரசியல் மற்றும் ஆசிரியர் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Was Minister Nirmal Kumar wife the only one to get a job transfer close to home CTR Nirmal Kumar embroiled in controversy


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->