முதல்வர் விஜய்யை சந்திக்க முடியாமல் அமைச்சர்கள் தவிப்பு? ஜெகதீஷ் பழனிசாமி ஆதிக்கம்! புஸ்ஸி ஆனந்தே புலம்புறாராமே! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் விஜய்யை, அவரது அமைச்சரவையில் உள்ள ஜூனியர் அமைச்சர்களே எளிதில் சந்திக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வரை சந்திக்க வேண்டுமென்றால், அவரது தனிச் செயலாளர் ஜெகதீஷ் பழனிசாமியிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் நீண்டகால மேலாளராக இருந்த ஜெகதீஷ் பழனிசாமி, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொருளாளராக நியமிக்கப்பட்டார். கட்சியின் சமூக வலைதள நடவடிக்கைகளிலும் அவர் முக்கியப் பங்காற்றியதாக கூறப்படுகிறது. தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

பொதுவாக முதலமைச்சரின் முக்கிய அலுவலகப் பொறுப்புகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், கட்சி நிர்வாகியாகவும் திரையுலகப் பின்னணி கொண்டவராகவும் இருக்கும் ஜெகதீஷ் பழனிசாமி இந்தப் பொறுப்பில் இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தற்போது முதல்வர் விஜய்யை சந்திப்பதற்கான நடைமுறையும் அமைச்சர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஜூனியர் அமைச்சர்கள் முதல்வரை நேரடியாக சந்திக்க வேண்டுமென்றால் முதலில் ஜெகதீஷ் பழனிசாமியிடம் கோரிக்கை வைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

மேலும், எதற்காக முதல்வரை சந்திக்க வேண்டும், என்ன விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களையும் தெரிவிக்க வேண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கோரிக்கையை பரிசீலித்த பிறகே, முதல்வரின் நேரத்தைப் பெற்று தருவதாகவும், இல்லையெனில் அமைச்சர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முதல்வரை சந்திக்க விரும்பிய சில ஜூனியர் அமைச்சர்களுக்கு இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை என்றும், இதனால் அமைச்சர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது துறை தொடர்பான முக்கிய விவகாரங்களை நேரடியாக முதல்வரிடம் எடுத்துச் சொல்ல முடியாத நிலை இருப்பதாக சில அமைச்சர்கள் ஆதங்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்சி ஆனந்தை சில அமைச்சர்கள் அணுகியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவரும் முதல்வரின் நேரடி சந்திப்புக்கு உடனடியாக ஏற்பாடு செய்ய முடியாது என்றும், தகவலை முதல்வரிடம் கொண்டு சேர்ப்பதாகவும், முதல்வர் விரும்பினால் அழைப்பு வரும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜெகதீஷ் பழனிசாமி தவெக இளைஞரணி பொறுப்பை பெறுவதற்காக அவரது ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்த தகவல்கள் முதல்வர் விஜய்யின் கவனத்திற்கும் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலங்களில் முதல்வரை அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் எளிதில் சந்தித்து ஆலோசனை நடத்தும் சூழல் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அமைச்சர்களுக்கே முதல்வரின் நேரடி சந்திப்பு கிடைப்பது கடினமாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், முதல்வர் அலுவலகத்தின் சந்திப்பு நடைமுறைகள் குறித்த இந்தத் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ministers struggling to meet Chief Vijay Jagadeesh Palanisamy holds sway Even Pussy Anand is reportedly lamenting the situation


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->