பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு விஜயகாந்த் கடும் கண்டனம்.!!
vijayakanth statament for petrol and gas price
பெட்ரோல் டீசல் மற்றும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் பெட்ரோல் டீசல் விலை உயரும் என்றும் 5 மாநில தேர்தலுக்கு பின் இந்த விலை உயர்வு இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்பட்டு வந்தது. அதன்படி 137 நாட்களுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே விலைவாசி உயர்ந்து வரும் நேரத்தில், அதை குறைப்பதற்கான நடவடிக்கைக்கு பதிலாக, அதன் விலையை மேலும் உயர்த்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. விலைவாசி உயர்வால் குடும்பம் நடத்த முடியாமல் ஏழை எளிய நடுத்தர மக்கள் திணறி வருகின்றனர்.
விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகள், அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயர்த்தி மக்களுக்கு மேலும் பொருளாதார சுமைகளை ஏற்படுத்துவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
மத்திய மாநில அரசுகள் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யாமல், அந்த சுமையை மக்கள் மீது திணிப்பது சரியல்ல. அந்த சுமையை மத்திய மாநில அரசுகளே ஏற்று, மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் இலங்கை நாட்டில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியை போன்று, இந்தியாவிலும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும், பயமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, மக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
English Summary
vijayakanth statament for petrol and gas price