இனி உங்கள் பெண் பிள்ளைகளை நீங்கள் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.! வேதனையில் வைகோ.!
VAIKO Statement for child abuse case
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, "தமிழகத்தில் அண்மைக் காலமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவதை, அன்றாடம் பதிவு செய்யப்படுகின்ற போக்சோ வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. கொரோனா முடக்கத்தின் விளைவாக வருமானத்திற்கு வழி இல்லாத குடும்பங்களில், பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருக்கின்ற ஆண் பெண் குழந்தைகள், வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.
அடித்தட்டு ஏழை எளிய குடும்பங்களுக்கு, அரசு நிதி உதவிகள் போதுமான அளவு கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்கள், இப்போது வறுமைக்கோட்டுக்குக் கீழே சென்று விட்டன. இத்தகைய சூழலில், பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த, குடும்பத்தினரே பின்னணியாக இருந்தார்கள் என்பதைப் படிக்கின்ற வேளையில் கண்ணீர் துளிர்க்கின்றது.
நாட்டில் நிலவுகின்ற வறுமையின் கொடுமையை உணர முடிகின்றது. அயனாவரத்தில் வாய் பேச முடியாத சிறுமிக்குக் கொடுமை இழைத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், பெற்றோர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்; கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. ஏற்கனவே, காவல் நிலையங்கள், கொலைக்களங்கள் ஆகி இருக்கின்றன.
இந்த நிலையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்ற ஒரு சில காவலர்களால், காவல் துறையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுகின்றது. எனவே, குற்றம் செய்கின்ற காவலர்கள், பாலியல் தரகர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில், சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அக்கறை கொண்டு, கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்." என்று வைகோ தெரிவித்துள்ளார்.
English Summary
VAIKO Statement for child abuse case