நெல் ஈரப்பத தளர்வை நிராகரித்த ஒன்றிய அரசு! விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம்...! - வைகோ கண்டனம்
Union government rejects rice moisture relaxation Green betrayal farmers Vaiko condemns
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியதாவது,"காவிரி டெல்டா மாவட்டங்களில் அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி, பெரிய அளவில் சேதமடைந்தன. இதனுடன், தற்போது நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகரித்து இருப்பதாகவும், எனவே கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

விவசாயிகளின் நிலையை உணர்ந்து, 17% என்று இருந்த நெல் கொள்முதல் ஈரப்பத அளவைக் 22% வரை உயர்த்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பியது.
அதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் உணவுத்துறை இயக்குநர்கள் நவீன் மற்றும் பிரீத்தி தலைமையிலான குழு, தொழில்நுட்ப அதிகாரிகள் ராகுல் மற்றும் அபிஷேக் பாண்டே ஆகியோர்களுடன் இணைந்து தமிழ் நாடு அரசு அதிகாரிகள் முன்னிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டது.
செங்கல்பட்டு, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் அக்டோபர் 25 முதல் 28 வரை நெல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இந்திய உணவு கழக ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டன.
இதன் அறிக்கை மத்திய உணவுத் துறைக்கு கடந்த மாத தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால், நெல் ஈரப்பதம் தளர்வு தொடர்பாக ஒன்றிய அரசிடம் எந்த நேர்மறையான பதிலும் வெளியாகவில்லை. இந்நிலையில், நெல் ஈரப்பத தளர்வை விரைவாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் இம்மாதம் 18ஆம் தேதி பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதியிருந்தார்.
இதையும்விட, ஒன்றிய உணவுத் துறை நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கையை நிராகரித்து, தமிழக அரசுக்கு மறுப்பு கடிதம் அனுப்பியுள்ளது.இதனை கடுமையாக விமர்சித்த வைகோ,“தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை நிராகரித்தது பச்சைத் துரோகம். 22% வரை நெல் ஈரப்பத தளர்வு வழங்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Union government rejects rice moisture relaxation Green betrayal farmers Vaiko condemns