கடந்தமுறை பாஜகவிடம் அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்தார்; இம்முறை விற்றுவிட்டார்; உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்..!
Udhayanidhi Stalin criticized Edappadi Palaniswami alleging that he has once again sold the AIADMK to the BJP
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பனை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது; ஐந்து ஆண்டுகள் திராவிட மாடல் ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அந்த தைரியத்தில் தான் இந்த முறை வாக்கு கேட்டு வந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய மடிக்கணினி திட்டத்தை 2019-இல் அவர்களே நிறுத்திவிட்டனர். ஆனால், முதல்வர், கல்லூரி மாணவர்களுக்கு தான் பயனுள்ளதாக இருக்கும் என்று, அவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணிகளை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பழனிசாமிக்கு 10 தோல்விகளை கொடுத்துள்ளோம். இந்த தேர்தலில் 10 தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக்கி வீட்டு அனுப்ப வேண்டும் என்றும் கூறியதோடு, கேஆர்.பெரியகருப்பனை 01 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் சிவகங்கையில் திமுக வேட்பாளர் கருணாஸை ஆதரித்து உதயநிதி பேசும் போது கூறியதாவது; முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்களை பார்த்திருப்போம். ஆனால், யாரும் முரட்டு அடிமையை பார்த்ததில்லை. இந்தியாவிலேயே நம்பர் ஒன் மோடியின் முரட்டு அடிமை பழனிசாமி தான். ஜாடிக்கு ஏற்ற மூடி போல், மோடிக்கேற்ற ஒரு பழனிசாமி என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அத்துடன், இந்த தேர்தலில் தமிழகத்தில் பாசிச, சங்கிக் கூட்டத்துக்கு இடமில்லை என்று வெளியேற்ற வேண்டும். கடந்த தேர்தலில் பாஜகவிடம் அதிமுகவை அடகு வைத்த பழனிசாமி, இந்த முறை விற்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக வெற்றி பெற்றால் பாஜக தான் டெல்லியிலிருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்யும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
English Summary
Udhayanidhi Stalin criticized Edappadi Palaniswami alleging that he has once again sold the AIADMK to the BJP