திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு.. அரசிதழில் ‘அப்பாவு’ பெயர் இடம்பெற்றது ஏன்? முழு விவரம்!
Trichy East constituency declared vacant Why was the name Appavu included in the gazette Full details
தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அரசியலமைப்பு விதிப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறும் ஒருவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால், விஜய் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது.
ஆனால், இந்த அரசிதழ் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள ஒரு விஷயம் தற்போது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தற்போதைய சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பதவியேற்றுள்ள நிலையில், அரசிதழில் சபாநாயகர் பெயராக முன்னாள் சபாநாயகர் அப்பாவு குறிப்பிடப்பட்டிருந்தது பலரிடமும் கேள்வியை எழுப்பியது.
இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் விவாதம் கிளம்பியது. “புதிய அரசு அமைந்த பிறகும் பழைய சபாநாயகர் பெயரில் எப்படி அறிவிப்பு வெளியானது?” என பலரும் கேள்வி எழுப்பினர்.
இதற்கான விளக்கமாக, சட்டப்பேரவை கலைக்கப்பட்ட பிறகும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும் வரை முந்தைய சபாநாயகரே பதவியில் தொடர்வார் என்பது குறிப்பிடப்படுகிறது. அதன்படி, விஜய்யின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்ட காலகட்டத்தில் அப்பாவுதான் சட்டப்படி சபாநாயகர் பதவியில் இருந்ததாக கூறப்படுகிறது.
எனவே, புதிய அரசு அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவை செயல்பாடுகளைத் தொடங்கும் முன் வெளியிடப்பட்ட அரசிதழ் என்பதால், அதில் அப்பாவு பெயர் இடம்பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
English Summary
Trichy East constituency declared vacant Why was the name Appavu included in the gazette Full details