நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்.! தமிழக முதலமைச்சர் பேட்டி.!
TN CM corona vaccine
நாடு முழுவதும் இன்று சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்படவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய -மாநில அரசுகள் முன்னெடுத்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி போடும் ஒத்திகை இரண்டு கட்டமாக நாடு முழுவதும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு ஊசி போடும் மையத்திற்கு சென்று, இந்த தடுப்பூசி போடும் பணியைத் 11 மணி அளவில் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் முதல் கொரோனா தடுப்பூசி, அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது.
பின்னர் தமிழக முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "கொரோனா தடுப்பூசி பிரதமரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி. தடுப்பூசி போட்ட 28 நாட்களுக்கு பிறகு 2வது டோஸை எடுத்துக்கொள்ள வேண்டும். மாநில முழுவதும் முதற்கட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்.
கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன். மக்கள் அனைவரும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும்." என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.