'தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்ட வரைவினால் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பு'; மாநில இந்​திய கம்​யூனிஸ்ட் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


''ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 கிலோ கிராம் உணவு தானியத்தை மாதம் தோறும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்ட வரைவின் காரணமாக, கிடைத்து வரும் 35 கிலோ கிராமையும் குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது'' என மாநில இந்​திய கம்​யூனிஸ்ட்  தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

''ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை கடந்த ஜூன் 24-ம் தேதி வெளியிட்ட 2026-ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்பு (திருத்த) சட்ட வரைவின் காரணமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

2013-ஆம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3-ன்கீழ், அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருள் உரிமைகளை குறைப்பதற்கு இத்திருத்தம் வகை செய்கிறது.

தற்போதைய நடை முறையின்படி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றிற்கு 35 கிலோ கிராம் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக மொத்தம் 35 கிலோ கிராம் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, நபர் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 7 கிலோ கிராம் உணவு தானியங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளது. இது ஏழைக் குடும்பங்களை கடுமையாக பாதிக்கும். தமிழ்நாட்டின் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 3.54 ஆக மட்டுமே உள்ளது. இத்திருத்தம், நடைமுறைக்கு வந்தால் இத்தகைய குடும்பங்களுக்கு 35 கிலோ கிராம் உணவு தானியம் கிடைக்காது. குறைந்துவிடும்.

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு இலவசமாக மாதம் தோறும் வழங்கும் வழங்கும் அரிசி, கோதுமை, கேழ்வரகு போன்ற 65,261 மெட்ரிக் டன் உணவு தானியங்கள், 42,040 மெட்ரிக் டன்னாகக் குறைந்துவிடும். இதனால் தமிழ்நாட்டில் 18,64,600 அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகள் மூலம் பயன் பெறும் 69,26,983 ஏழை பயனாளிகள் பாதிக்கப்படுவர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 50 கிலோ கிராம் உணவு தானியத்தை மாதம் தோறும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கிடைத்து வரும் 35 கிலோ கிராமையும் குறைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது.

இது ஏழைகளின் உணவு பாதுகாப்பிற்கு எதிரானது. எனவே, “2013ம் ஆண்டு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (1)-ன் முதலாவது வரம்பு நிபந்தனைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்“ என தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு, கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதை ஒன்றிய பாஜக அரசு ஏற்க வேண்டும்.

ஏழைகளுக்கு எதிரான இத்திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது'' என்று  மு.வீர​பாண்​டியன் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The state Communist Party of India condemns the National Food Security Amendment Bill saying it will harm the people of Tamil Nadu


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->