இரட்டைத் தொகுதியில் போட்டி: தமிழக அரசியல் வரலாறும் தற்போதைய களமும்!
Tamil Nadu Elections A History of Leaders Contesting in Dual Constituencies
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ல், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் சென்னை பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் இந்த நடைமுறை தமிழக அரசியலுக்குப் புதியதல்ல என்றாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முக்கியக் கட்சித் தலைவர் இத்தகைய முடிவை எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.
சட்ட விதிமுறைகள்:
1995-ஆம் ஆண்டு வரை ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற நிலை இருந்தது. இருப்பினும், 1996-ல் கொண்டு வரப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத் திருத்தத்தின்படி, ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அவ்வாறு இரண்டிலும் வெற்றி பெற்றால், 10 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதியாகும்.
வரலாற்றுச் சான்றுகள்:
தமிழக வரலாற்றில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற பெருமை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையே சாரும். அவர் 1991-ல் காங்கயம் மற்றும் பர்கூர் தொகுதிகளில் வென்று சாதனை படைத்தார். பின்னர் 2001-ல் அவர் நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்தபோது, சட்ட விதிகளின்படி அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல், 2001-ல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் க. கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் மற்றும் வால்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார், ஆனால் இரண்டிலும் தோல்வியடைந்தார்.
தற்போதைய சூழல்:
கடந்த 25 ஆண்டுகளாக எந்தவொரு முக்கியக் கட்சித் தலைவரும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடாத நிலையில், நடிகர் விஜய் தற்போது அந்த மரபை உடைத்துள்ளார். குறிப்பாக, தனது முதல் தேர்தலிலேயே இரண்டு தொகுதிகளைத் தேர்ந்தெடுத்திருப்பது அவரது அரசியல் துணிச்சலாகவும், வெற்றியை உறுதி செய்யும் உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. விஜய்யின் இந்த இரட்டைப் போட்டி முடிவு 2026 தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English Summary
Tamil Nadu Elections A History of Leaders Contesting in Dual Constituencies