குடும்பத் தலைவிக்கு தலா 22 ஆயிரம் ரூபாய்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்ட கணக்கு..!!
Sellur Raju said DMK govt should be given Rs22000 to each family
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் குடும்பத்தினரும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் "உலகில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என மீனாட்சியம்மனை வேண்டி உள்ளேன். இந்த ஆண்டு அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலமாக இருக்கும்.
அதிமுக ஆட்சி மிக விரைவில் வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தற்பொழுது திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியின் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்க முடியாத கல்வெட்டாக உள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனையில் உள்ளோம். தனி மனிதன், தன் குடும்பம் என்று இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்கு அதிமுகவே ஒரு சாட்சி.
திமுக ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 22 மாதங்கள் ஆகிவிட்டன. திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கப்பட்டிருந்தால் இதுவரை ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் திமுக அரசு ரூபாய் 22 ஆயிரம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் குடும்பத் தலைவிகளுக்கு கொடுக்காமல் ஏமாற்றி வருகிறது. பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்கே திமுக அரசு தடுமாறி வருகிறது.
அதிமுகவின் போராட்டத்திற்கு பயந்து தான் பொங்கல் தொகுப்பில் கரும்பை சேர்த்தனர். அனைத்து வரிகளையும் உயர்த்திவிட்டு பொங்கலுக்கு அறிவித்த ஆயிரம் ரூபாய் பரிசு என்பது யானை பசிக்கு சோள பொரி என்பது போல உள்ளது" என செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Sellur Raju said DMK govt should be given Rs22000 to each family