சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் - சீமான்.! - Seithipunal
Seithipunal


சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களின் துயர்துடைக்கப் பொருளுதவிகள் செய்யுங்கள் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இலங்கை இனவாத அரசாங்கத்தின் 30 ஆண்டுகால இனவழிப்புப்போர் காரணமாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் ஈழச்சொந்தங்கள் மட்டுமல்லாது, சிங்கள மக்களும் சிக்குண்டு சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அங்கிருந்து வரும் செய்திகள் பெருங்கவலை அளிக்கின்றன. 

ராஜபக்சே அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள மக்கள் இரண்டு மாதக்காலத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், போராடும் மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் அரச வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறது கொடுங்கோல் சிங்கள அரசு. அரைநூற்றாண்டு காலமாக தமிழின மக்கள் அனுபவித்து வந்த கொடுமைகளின் வலியையும், அரசதிகாரத்தின் கொடுங்கோன்மையையும் தற்போது சிங்களப்பொதுமக்களும் மெல்ல மெல்ல உணரத் தொடங்கியுள்ளனர். 

அதன் வெளிப்பாடே, போராட்டக்களங்களில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பெயர் சிங்கள மக்களால் உச்சரிக்கப்படுவதும், புலிகளின் ஆட்சியின் கீழ் இருந்திருந்தால் இந்நிலை வந்திருக்காது என வெளிப்படும் அம்மக்களின் எண்ணவோட்டமுமாகும்.

மண்ணையும், மக்களையும் காக்க, இன எதிரிகளோடு ஆயுதமேந்திச் சண்டையிடும் விடுதலைக்கான மறப்போரிலும் அறத்தைக் காத்து, சத்தியத்தின் திருவுருவாய் நின்ற உன்னதத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களது வழியில் வந்த நாம் துன்பப்படும் மக்கள் எவராயினும், எவ்விதப்பாகுபாடும் பாராமல் அவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டி துயர்போக்க இயன்றதைச் செய்ய வேண்டியது நமது தார்மீகக் கடமையாகும். 

அதுவே தமிழரின் மாண்பு; நமது முன்னோர்கள் வகுத்துத் தந்த உயர்நெறிக்கோட்பாடாகும். அந்நிலத்தில் வாழும் அனைத்து மக்களும் கடுமையானப்பொருளாதார நெருக்கடிக்கு ஆட்பட்டு, பசியிலும், வறுமையிலும் வாடி வருகின்றனர். எனவே, தற்போதைய நெருக்கடிமிகு சூழலில் அம்மக்களின் துயரத்தைப்போக்கும் முன்னெடுப்பை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளவிருக்கிறது.

அதுசமயம், சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஈழத்துச்சொந்தங்கள் உள்ளிட்ட அம்மக்களுக்கு உதவுவதற்காக மாநிலம் முழுமைக்கும் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்படவிருக்கிறது. ஆகவே, அரிசி, பருப்பு, எண்ணெய் வித்துகள், தானியங்கள், உலர் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட துயர்துடைப்புக்கான அத்தியாவசியப் பொருட்களை, சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலுக்கு அனுப்பியோ, நேரடியாகவோ தந்து மக்களின் துயர்போக்க தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டுமெனக் கோருகிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman say about sri lankan people help


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->