அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பு கேள்விக்குறி: விஷப்பாம்பு-விஷப்பூச்சி தாக்கி 2 மாணவர்கள் பலி…! - சாடிய எடப்பாடி பழனிசாமி
Safety government schools question mark 2 students die after being attacked by venomous snake and insect Edappadi Palaniswami slams DMK
திருவாரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசுப்பள்ளிகளில் நிகழ்ந்த இரு துயரச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வலங்கைமானில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் ஒரு மாணவன் உயிரிழந்ததோடு, குமாரமங்கலத்தில் விஷப்பூச்சி கடியால் 3-ம் வகுப்பு மாணவியும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்த இரு உயிரிழப்புகளும் கல்வி வளாகங்களின் பாதுகாப்பு நிலை குறித்து பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், “அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் குழந்தைகளின் உயிரே ஆபத்தில் உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
அதுமட்டுமின்றி, மேற்கூரை இடிந்து விழுமோ, சுவர் சரிந்து விடுமோ, தரமற்ற உணவு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலேயே மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நிலை உருவாகிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார். இதனுடன், கள்ளக்குறிச்சி அருகே கீழத்தேனூர் பள்ளியில் மாணவர்களையே நீர்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்திருப்பது மேலும் கவலைக்குரியது என்று தெரிவித்தார்.
மேலும், “பள்ளிக்கல்வித்துறைக்கு பணியாளர்களே இல்லையா? படிக்க வரும் மாணவர்களை வேலைக்கு பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்களின் பாதுகாப்பை புறக்கணித்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது பெரிய குற்றம்” என அவர் சாடினார்.
மேலும், கல்வித் துறையில் குறைபாடுகள் நிறைந்திருக்கும்போது ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு’ என்ற பெயரில் சுயவிளம்பரம் செய்வது வெட்கக்கேடு என்றும், பள்ளி பராமரிப்பில் அரசு அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இறுதியாக, விஷப்பாம்பு மற்றும் விஷப்பூச்சி தாக்குதலால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிவாரணமும், அரசுப்பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
English Summary
Safety government schools question mark 2 students die after being attacked by venomous snake and insect Edappadi Palaniswami slams DMK