திமுக கூட்டணியில் ‘ஆட்சிப் பங்கு’ சலசலப்பு? விஜய்தான் டர்னிங் பாயிண்ட்? வெடித்து கிளம்பும் திமுக கூட்டணி தலைகள்!
Ruling role ruckus in DMK alliance Vijay is the turning point DMK alliance heads are exploding
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சித் தலைவர்கள் வெளியிட்டு வரும் கருத்துகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
சமீபத்தில் வெளியான பல்வேறு எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என கணித்துள்ளன. அதே நேரத்தில் சில கருத்துக்கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த பின்னணியில் கூட்டணி கட்சித் தலைவர்களின் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபையை உருவாக்கும் பட்சத்தில் ஆட்சிப் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “இதுகுறித்து தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பேசுகிறேன்” என பதிலளித்தது அரசியல் அரங்கில் பேசுபொருளானது. இதற்கு முன்பு ஆட்சிப் பங்கு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத நிலையில், தற்போது அந்த வாய்ப்பை திறந்தவாறு வைத்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய கருத்துகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட சில தொகுதிகளில் விசிக நிர்வாகிகள் போதிய அளவில் பணியாற்றவில்லை என அவர் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். இது கூட்டணிக்குள் உள்ள ஒத்துழைப்பு நிலை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதேபோல், சிபிஎம் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணனும் திமுக கூட்டணியில் இடதுசாரிகளுக்கான அரசியல் அங்கீகாரம் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். வேலைவாய்ப்பு, இளைஞர்களின் எதிர்பார்ப்பு மற்றும் மாற்றத்திற்கான மனநிலை குறித்து அவர் கூறிய கருத்துகள் தற்போதைய அரசியல் சூழலை பிரதிபலிப்பதாக பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தரப்பிலும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் வாக்கு தாக்கம் இந்தத் தேர்தலில் முக்கிய பங்காற்றியிருக்கும் என எம்பி ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தும் தேர்தல் முடிவுகள் வழக்கத்திற்கு மாறான திருப்பங்களை ஏற்படுத்துமா என்ற விவாதத்தை தூண்டியுள்ளது.
கூட்டணிக் கட்சிகளின் இந்தத் தொடர்ச்சியான கருத்துகள், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிப் பங்கீடு குறித்து வலியுறுத்தும் அரசியல் சிக்னலாக பார்க்கப்படுகின்றன. எனினும், இறுதி முடிவுகள் வெளியாகும் வரை எந்தத் தீர்மானத்தையும் உறுதியாகக் கூற முடியாது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
தமிழக அரசியலில் அடுத்த கட்டம் எப்படி அமையும் என்பதற்கு மே 4ஆம் தேதியிலான வாக்கு எண்ணிக்கையே தெளிவான பதிலை வழங்கும்.
English Summary
Ruling role ruckus in DMK alliance Vijay is the turning point DMK alliance heads are exploding