நாளை இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்; 23 கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்; மம்தாவும் கலந்துகொள்கிறார்..?
Reports indicate that 23 parties will participate in the INDIA alliance consultative meeting tomorrow
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்க உள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாளை மதியம் 12 மணிக்கு, டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் தொடங்க உள்ள இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவுடன் கூட்டணி சேர்ந்ததால் இந்த கூட்டத்தில், பங்கேற்கப் போவதில்லை என்று திமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நாளை (ஜூன் 8, 2026) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள 'இண்டியா' கூட்டணி கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. சில கட்சிகள் தங்கள் சொந்தக் காரணங்களால் இந்தக் கூட்டத்தில் இணைய இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், மோடி அரசின் சில கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் அவை கடுமையாக எதிர்க்கின்றன.

குறிப்பாக, லட்சக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்தது, அரசியலமைப்பைத் தொடர்ந்து தாக்கி வருவது, புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைப்பது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கச் செய்தது, தொடர் விலைவாசி உயர்வால் குடும்ப பட்ஜெட்டைச் சீர்குலைத்தது, லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளையும் லட்சியங்களையும் ஏமாற்றியது, முதலீட்டுச் சூழலை பலவீனப்படுத்தியது, வெளியுறவுக் கொள்கை மூலம் தேசிய நலன்களைப் பாதிப்படையச் செய்தது ஆகியவற்றை அவை எதிர்க்கின்றன. இந்தியாவைப் போலவே, 'இந்தியா' கூட்டணியும் பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக நிற்கிறது.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இந்த கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பங்கேற்கவுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில் இண்டியா கூட்டணியுடன் இணக்கமாக இருப்பது மிகவும் முக்கியம் என அவர் கருதுவதாக கூறப்படுகிறது.

நாளைய கூட்டம் குறித்து, திரிணமூல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; ''பொதுவான நோக்கத்துடனும் தெளிவான குறிக்கோளுடனும் இக்கூட்டம் நடைபெறும். 'இண்டியா' கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. பல கட்சிகள் தோழமை உணர்வுடன் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க ஆவலுடன் உள்ளன.'' என தெரிவித்துள்ளார்.
English Summary
Reports indicate that 23 parties will participate in the INDIA alliance consultative meeting tomorrow