ராஜ்யசபா சீட் விவகாரம்: தேமுதிக கூட்டணி முடிவில் இழுபறி – மகனுக்காக முட்டி மோதிய பிரேமலதா! கடைசி வரை இறங்கி வராத எடப்பாடி!
Rajya Sabha seat issue DMDK alliance ends in a stalemate Premalatha fights for her son Edappadi who did not come down till the end
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் திமுகவும், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அதிமுகவும், கூட்டணி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சிறிய மற்றும் நடுத்தர கட்சிகளின் ஆதரவை உறுதி செய்ய இரு அணிகளும் கணக்குப் போட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) தேமுதிக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கிய இழுபறி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்வைத்த ராஜ்யசபா உறுப்பினர் பதவி கோரிக்கையே இந்த தாமதத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அரசியல் தகவல்களின்படி, என்டிஏ கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளின் போது, தேமுதிக தரப்பில் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தேமுதிக தனது கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்காமல் தாமதித்து வருவதாக சொல்லப்படுகிறது.
மறுபுறம், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உறுதியான இடத்தைப் பெற்றுள்ளன. தற்போது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும், ‘ஆட்சியில் பங்கு’ போன்ற கோரிக்கைகளுக்கு திமுக திட்டவட்டமாக இடமில்லை எனத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாமக மற்றும் அமமுக இணைப்பு தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. ஆனால், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்த தேமுதிக மட்டும் இதுவரை எந்தத் தெளிவான முடிவையும் அறிவிக்காதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும், தேமுதிக ஒரு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கியை வைத்திருப்பதாக பாஜக மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வட மற்றும் மத்திய மாவட்டங்களில் தேமுதிக வாக்குகள் தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே, அக்கட்சியை என்டிஏ கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தலைமை அதிக ஆர்வம் காட்டுவதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மேலிடத் தலைவர்கள், தேமுதிக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த பின்னணியில், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரி 9-ஆம் தேதி அறிவிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் முன்பே கூறியிருந்தார். ஆனால், அந்த நாளில் கடலூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தேமுதிக தரப்பினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக வட்டாரங்களின் தகவலின்படி, எடப்பாடி பழனிசாமி பொதுவாகவே பிற கட்சிகளுக்கு ராஜ்யசபா சீட் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளவர். கடந்த மாநிலங்களவைத் தேர்தலிலும், அதிமுகவினருக்கே அந்த இடங்களை ஒதுக்கியிருந்தார். ஆனால், தற்போது டிடிவி தினகரன் அமமுகவுடன் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளதால், டெல்லி அரசியலை கவனிக்க அவருக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு சீட் அதிமுகவினருக்கே ஒதுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், கிடைக்கக்கூடிய இரண்டு ராஜ்யசபா இடங்களும் ஏற்கனவே நிரப்பப்பட்டுவிட்ட நிலையில், பிற கட்சிகளுக்கு மாநிலங்களவை இடம் வழங்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே பிரேமலதா விஜயகாந்த் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தி, தேமுதிக கூட்டணி முடிவில் மேலும் தாமதத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேமுதிக எடுக்கும் இறுதி முடிவு எந்த அணிக்கு சாதகமாக அமையும் என்பது தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
Rajya Sabha seat issue DMDK alliance ends in a stalemate Premalatha fights for her son Edappadi who did not come down till the end