காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்! எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. சட்டமன்றத்தில் தேவையான ஆதரவு பலம் இருப்பதால், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இந்த இடத்தை எளிதாக வெல்லும் நிலையில் இருந்தாலும், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அந்த இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

மயிலம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக மூத்த தலைவர் சி.வி. சண்முகம், தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த இடம் காலியாகியது. அவரது பதவிக்காலம் 2028 ஜூன் மாதம் வரை இருந்த நிலையில், தற்போது மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கான உறுப்பினரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த ராஜ்யசபா இடம் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், "தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருப்பவராக கருதப்படுவது பிரவீன் சக்கரவர்த்தி. ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராக அறியப்படும் அவர், காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வு பிரிவை வழிநடத்தி வருகிறார்.

மேலும், தவெக – காங்கிரஸ் அரசியல் ஒத்துழைப்பு உருவாகும் முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்ற அடையாளமும் அவருக்கு உள்ளது. விஜய்யுடன் நல்ல உறவு கொண்டிருப்பதும் அவரது வாய்ப்பை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மறுபுறம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் விலகக்கூடும் என கூறப்படுகிறது. இதனால் அரசியல் ரீதியாக புதிய பொறுப்பை எதிர்நோக்கி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும் முன்னிறுத்தி, தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தில் ஆதரவு திரட்ட முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியல் பார்வையாளர்களின் கணிப்புப்படி, தற்போதைய சூழலில் பிரவீன் சக்கரவர்த்திக்கே வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இந்த பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே என்பதால், அவர் விருப்பம் தெரிவிக்காத சூழல் உருவானால் செல்வபெருந்தகைக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

எனவே, தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் அடுத்த ராஜ்யசபா உறுப்பினராக யார் தேர்வாகப் போகிறார் என்பது இன்னும் சில நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rajya Sabha seat for Congress Selva Perundakai to become MP Praveen Chakravarthy stands in the way Who is lucky


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->