#Breaking :: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரையில் கைது!
PT party President Dr. Krishnasamy Arrested in Madurai
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து தென் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு அமல்படுத்திய புதிய மின்துறை கொள்கை மூலம்30 முதல் 50 சதவிகித மின் கட்டண உயர்வு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தொழில், வணிக முடங்கு சூழல் உருவாகியுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில் மாதம் ஒருமுறை மின் கட்டண அளவீடு, மின் கட்டண உயர்வு ரத்து, தடையில்லா மின்சாரம் என வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் சென்னை மற்றும் கோவையில் போராட்டங்கள் நடைபெற்றன.
அதேபோன்று தென் மாவட்டங்களில் நவம்பர் 2 - விருதுநகர், நவம்பர் 3 - தென்காசி, நவம்பர் 4 - திருநெல்வேலி, நவம்பர் 5- தூத்துக்குடி மாவட்டங்களில் போராட்டம் நடத்துவதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி காரில் மதுரை வழியாக சென்றுள்ளார்.
டாக்டர் கிருஷ்ணசாமி சென்ற காருடன் அவருடைய ஆதரவாளர்கள் நான்கு கார்களில் சென்றுள்ளனர். இந்த நிலையில் மதுரையை அடுத்த வலையாங்குளம் சுங்கச்சாவடியில் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்ற நான்கு கார்களையும் போலீசார் வழிமறித்துள்ளனர்.
சாலை விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பயணம் மேற்கொண்டதால் அனைவரையும் கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் திமுக மற்றும் காவல் துறையினரை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமியையும் அவருடைய ஆதரவாளர்களையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் வலையாங்குளம் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
PT party President Dr. Krishnasamy Arrested in Madurai