நாடாளுமன்றத்தில் அரங்கேறிய நெகிழ்ச்சி: பிரதமர் மோடி - ராகுல் காந்தி இடையேயான அரிய சந்திப்பு!
PM Modi and Rahul Gandhi Share Candid Conversation in Parliament
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வு, இந்திய அரசியலில் நீண்ட நாட்களாகக் காணப்படாத ஒரு ஆரோக்கியமான ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தியுள்ளது.
சமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபா பூலேயின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டு சிறிது நேரம் உரையாடியது அங்கிருந்தவர்களையும் சமூக வலைதளங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமர் மோடி தனது வாகனத்திலிருந்து இறங்கி வந்த போது, அங்கு நின்றிருந்த ராகுல் காந்தியைக் கண்டதும் நின்று அவரிடம் பேசத் தொடங்கினார். இருவரும் சில நிமிடங்கள் மிக நெருக்கமாக நின்று, புன்னகையுடன் கருத்தாடல் செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பொதுவாக நாடாளுமன்றத்திற்குள்ளும், தேர்தல் மேடைகளிலும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்ளும் இவ்விரு தலைவர்களும், பொதுவெளியில் இத்தகைய நட்புணர்வோடு பேசியது ஒரு அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மத்திய அமைச்சர்களும் அருகிலிருந்தனர்.
ஜோதிபா பூலேயின் புகழைப் போற்றும் வகையில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தேசத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது தலைவர்கள் காட்டிய இந்த ஒற்றுமை பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. "ஜனநாயகத்தின் உண்மையான அழகு இதுதான்" என்று நெட்டிசன்கள் பலரும் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தச் சந்திப்பின் போது அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதாகத் தெரிகிறது.
English Summary
PM Modi and Rahul Gandhi Share Candid Conversation in Parliament