#சென்னை || மு.க ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அமைதிப் பேரணி.!!
Peace rally on 7th August under MKStalin leadership
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 5வது நினைவு நாள் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7ம் தேதி கருணாநிதியின் நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட திமுக சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் "தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்படத் தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் ஐந்து முறை முதலமைச்சராக, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர் அறிஞர் அண்ணாவோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் கலைஞர்.

கலைஞரின் 5வது நினைவு நாளினையொட்டி தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி"ஆகஸ்ட் 7 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Peace rally on 7th August under MKStalin leadership