மழையில் நனைந்த நெல் மூட்டைகள்...விவசாயிகள் வேதனை!- ஜிகே வாசன் அரசு நடவடிக்கைக்கு எச்சரிக்கை
Paddy bundles soaked rain Farmers in pain GK Vasan warns government action
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மழையால் தத்தளிக்கும் வேளையில், நெல்கொள்முதல் நிலையங்களில் ஏற்பட்ட குழப்பம் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில் அவர் தெரிவித்ததாவது,"தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க, நெல்மூட்டைகளை சரியான முறையில் சேமிக்க தேவையான இட வசதி, தார்ப்பாய், சணல் மூட்டைகள் ஆகியவை போதுமான அளவில் இருக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

மேலும், டெல்டா மாவட்டங்களான அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் பகுதிகளில் விவசாயிகள் கடின உழைப்பில் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்தபோதும், போதிய இட வசதி இல்லாத காரணத்தால் நெல் கொள்முதல் தாமதமாகி வருகிறது.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளும் கிடங்குகளுக்கு உடனடியாக மாற்றப்படாமல், மழைநீரில் நனைந்து பெரும் அளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.3 லட்சம் நெல்மூட்டைகள் மழைநீரால் அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் உழைப்பின் பலன் வீணாகி வருவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர்.
"விவசாயிகள் கடன் வாங்கி உழைத்து, வியர்வை சிந்தி வளர்த்த நெல் மழையில் அழியும்போது, அவர்கள் மன வேதனை சொல்லி முடிக்க முடியாது. அரசு இதை எவ்வாறு அமைதியாக பார்க்கிறது?” என வாசன் கேள்வி எழுப்பினார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது,"நெல்கொள்முதல் நிலையங்களை அரசு தன்னுடைய கண்காணிப்பில் வைத்துக்கொண்டு, தினசரி கொள்முதல் எண்ணிக்கையை 500 மூட்டைகளில் இருந்து அதிகரிக்க வேண்டும்.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும்.மேலும், தேவையற்ற தரை வாடகை பெயரில் விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். விவசாயிகள் நஷ்டமின்றி தங்களுக்குரிய விலையை உடனடியாக பெறும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
English Summary
Paddy bundles soaked rain Farmers in pain GK Vasan warns government action