ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை; அவர் இன்னும் என்டிஏ-வில்தான்இருக்கிறார் ! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை! அதிர்ச்சியில் எடப்பாடி!
OPS was not left alone he is still in the NDA Annamalai created a stir Edappadi is in shock
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், அவர் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் (என்டிஏ) இருக்கிறார் என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஓபிஎஸ்ஸை மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் உறுதியாக கொண்டு வர பாஜக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதா என்ற கேள்வியை அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.
லோக்சபா தேர்தலில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றிருந்த ஓ. பன்னீர் செல்வம், அதன் பின்னர் அரசியல் ரீதியாக தனித்து விடப்பட்டுள்ளதாகவே இதுவரை பேசப்பட்டு வந்தது. அதிமுகவில் மீண்டும் இணைய முயன்ற ஓபிஎஸ், எந்த நிபந்தனையும் வைக்கவில்லை என்றாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன” என்று தெளிவாக கூறி, அவரை ஏற்க மறுத்தார்.
இந்த சூழலில், ஓபிஎஸ்க்கு தற்போது மூன்று அரசியல் வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஒன்று, திமுகவுடன் கூட்டணி அமைத்து சில தொகுதிகளில் போட்டியிடுவது; இரண்டாவது, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையிலான கட்சியில் இணைவது; மூன்றாவது, பாஜகவுடன் இணைந்து என்டிஏவில் தொடர்வது. தை மாதத்தில் முடிவு எடுத்து அறிவிப்பேன் என்று ஓபிஎஸ் முன்பே கூறியிருந்த நிலையில், தை மாதம் முடிவடைய உள்ள போதும், அவர் இதுவரை எந்தத் தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
பாஜக தலைமையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த ஓபிஎஸ், அங்கிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால், தற்போது தேனி மாவட்டத்தில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேனி மாவட்டத்தில் இருந்த அவரது சில ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தது, ஓபிஎஸ் தரப்புக்கு கூடுதல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால், அவரது அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி மேலும் வலுத்துள்ளது.
இந்த நிலையில், சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறித்து பேசிய அவர், “கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை அவர் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். அடுத்த முறை பேசும்போது அவர் அதை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன்” என்றார்.
மேலும், விஜய் குறித்து பேசிய அண்ணாமலை, “தவெக தலைவர் விஜய் தனது கொள்கைகளை மக்கள் முன் வைக்கட்டும். நாங்கள் என்டிஏ கொள்கைகளை மக்கள் முன் வைக்கிறோம். இறுதி முடிவை மக்கள் தான் எடுப்பார்கள். அரசியலில் நாகரீகம் முக்கியம்; லட்சுமண ரேகையை கடக்கக் கூடாது” என்று கூறினார்.
அதே பேட்டியில், ஓ. பன்னீர் செல்வம் குறித்து அவர் தெரிவித்த கருத்துதான் அதிக கவனம் பெற்றுள்ளது. “ஓபிஎஸ் தனித்துவிடப்படவில்லை. அவர் எங்களோடு தான் இருக்கிறார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது” என்று அண்ணாமலை கூறினார். இந்த ஒரே வாக்கியம், ஓபிஎஸ்ஸை மீண்டும் என்டிஏ கூட்டணிக்குள் அதிகாரப்பூர்வமாக கொண்டு வர பாஜக முயற்சி தொடங்கியிருக்கிறதா என்ற புதிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அண்ணாமலையின் இந்த விளக்கம், ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், அவர் எந்தப் பாதையைத் தேர்வு செய்யப் போகிறார் என்பதே, வரும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது.
English Summary
OPS was not left alone he is still in the NDA Annamalai created a stir Edappadi is in shock