மத்திய அரசுடன் மோதல் வேண்டாம்.. அமைச்சர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்தது முதலே, மத்திய அரசுடனான உறவை மாநில அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில், கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி, நிர்வாக ரீதியாக மத்திய அரசுடன் தேவையற்ற மோதலைத் தவிர்த்து சுமுகமான உறவைத் தொடர்வதில் முதலமைச்சர் விஜய் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட வீட்டு மசாலாப் பொடிகளை அமித் ஷாவுக்கு விஜய் பரிசாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த தனிப்பட்ட சந்திப்பு இரு தரப்புக்கும் இடையிலான இணக்கமான சூழலை வெளிப்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுடன் உருவாகியுள்ள நல்லுறவு எந்தக் காரணத்தாலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை விவாதத்தின்போது, உறுப்பினர் வன்னி அரசு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாகவும், இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலையிட்டு, சர்ச்சைக்குரிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.

மத்திய தலைவர்கள் குறித்த விமர்சனங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், மத்திய பாஜக அரசை தேவையின்றி அரசியல் ரீதியாக விமர்சிக்க வேண்டாம் என அமைச்சர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“உங்கள் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வையுங்கள். ஆனால் மத்திய அரசை விமர்சிக்க வேண்டாம். அமித் ஷா, மோடி ஆகியோரை விமர்சனம் செய்யாமல், மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்து தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களையும் நிதியையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்” என விஜய் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் நிதித் தேவைகள், பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் ஒப்புதல்கள், கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவற்றில் டெல்லியின் ஒத்துழைப்பு அவசியம் என்பதே இந்த அணுகுமுறைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

முந்தைய ஆட்சிக் காலங்களைப் போல அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசுடன் தொடர் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, கொள்கை ரீதியான முரண்பாடுகளை தனியாக வைத்துக்கொண்டு நிர்வாக ரீதியாக இணக்கமான பாதையில் செல்வதே விஜய் அரசின் தற்போதைய வியூகமாக இருப்பதாகத் தெரிகிறது.

மத்திய அரசுடன் இணக்கமான உறவைப் பேணுவதன் மூலம் தமிழகத்துக்கான திட்டங்கள் மற்றும் நிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விஜயின் இந்த அணுகுமுறை, தமிழக அரசியலில் புதிய வகையான நிர்வாக வியூகத்துக்கு அடித்தளம் அமைக்குமா என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No confrontation with the Central Government Vijay issues a stern directive to ministers


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->