என்டிஏ தனியாக ஆட்சி அமைக்கும்! விஜய் உடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி? பாஜக தலைவர் சொல்வது இதுதான்!
NDA will form government alone Post election alliance with Vijay This is what the BJP leader says
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிந்தைய கூட்டணிகள் குறித்த அரசியல் விவாதங்கள் சூடு பிடித்துள்ளன. குறிப்பாக, தொங்கு சட்டசபை ஏற்பட்டால் அதிமுக – விஜய் கூட்டணி அமையலாம் என்ற தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நியூஸ்18-க்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், “விஜய்யுடன் கூட்டணி அமைக்கும் தேவையே இருக்காது. நாங்கள் ஏற்கனவே வலுவான கூட்டணியில் இருக்கிறோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனியாகவே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்த அவர், “சினிமா கவர்ச்சி மட்டும் கொண்டு அரசியலில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது. ஆரம்பத்தில் ஒரு கவனம் கிடைக்கலாம். ஆனால் அடிமட்டத்தில் மக்கள் ஆதரவை உருவாக்குவது தான் முக்கியம். விஜய்க்கு இது தொடக்கம் மட்டுமே; அது பெரிய மாற்றமாக மாறுமா என்பதை காலமே தீர்மானிக்கும்” என்றார்.
இந்தத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகியவை வலுவான கூட்டணியுடன் களம் கண்ட நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தனித்துப் போட்டியிட்டது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள இந்த புதிய கட்சியின் தாக்கம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, “தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை” என்று நிதின் நபின் தெளிவாகக் கூறியிருப்பது, அரசியல் சமன்பாடுகளில் புதிய சிக்னலாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 85% வரை வாக்குகள் பதிவான நிலையில், இந்த அதிக வாக்குப்பதிவு யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இறுதி முடிவுகள் வரும் மே 4ஆம் தேதி வெளியாகும் நிலையில், விஜய் ‘ஃபேக்டர்’ எந்தளவுக்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது அன்றே தெளிவாகும்.
English Summary
NDA will form government alone Post election alliance with Vijay This is what the BJP leader says