கர்நாடகாவின் மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி; இதற்காகவாவது தமிழக முதல்வர் விஜய் வாய் திறந்து பேசுவாரா..? கே.என்.நேரு கேள்வி..!
KN Nehru questions whether Tamil Nadu Chief Minister Vijay will at least speak up regarding the Mekedatu dam issue
''காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது'' என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
''காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை என்று டி.கே.சிவகுமார் சொல்லி இருப்பது அவரது ஆணவப் போக்கைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது என்ற எண்ணத்தில் சிவக்குமார் இப்படி பேசி இருப்பது போலத் தெரிகிறது. தங்களது காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எதிர்ப்பு இருக்காது என்று நினைத்து, துடுக்குடன் வார்த்தைகளை விட்டுள்ளார் அவர்.

மேகேதாட்டுவில் அணை கட்டும் விஷயத்தில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக சிவக்குமார் சொல்லி இருக்கிறார். காவிரி நதியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட திமுக தலைவர் ஸ்டாலின் எந்தவிதத் தியாகம் செய்யவும் தயங்க மாட்டார். மேகதாது அணையை கர்நாடகம் கட்டுவது என்பது, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி தற்பொழுது மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்தினை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

காவிரி உரிமைகளை நசுக்கும் விதமாக அமைந்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரின் பேச்சுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் இப்போதாவது வாய் திறந்து கண்டிக்க வேண்டும். தமிழ்நாட்டின் போராட்டங்கள் விழலுக்கு இறைத்த நீராகி விடக்கூடாது.
காவிரி விவகாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும், அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒரே குரலில் ஒலிக்கிறது, ஒரே உணர்வில் இயங்குகிறது என்பதை, முதல்வர் விஜய் தங்களுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்.
மேகேதாட்டுவில் அணை கட்டும் அவர்களது முயற்சியை துவக்கத்திலேயே முறியடிக்க வேண்டும். இப்போதாவது - இதற்காகவாவது தமிழக முதல்வர் வாய் திறந்து பேசுவாரா என மக்கள் காத்திருக்கிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
KN Nehru questions whether Tamil Nadu Chief Minister Vijay will at least speak up regarding the Mekedatu dam issue